வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : திங்கள், 12 மே 2014 (13:21 IST)

எனக்கும் மோடிக்கும் தான் போட்டி, காங்கிரஸ் வேட்பாளர் போட்டியில் இல்லை - அரவிந்த் கெஜ்ரிவால்

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கும் பாஜகவின் பிரதமர் வேட்பாளுமான மோடிக்கும் தான் வாரணாசி தொகுதியில் போட்டி எனவும், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அஜய் ராய் போட்டியிலேயே இல்லை எனவும் பேசியுள்ளார். 
16 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒன்பதாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு  உத்தர பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 
 
மொத்தம் 41 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த வாக்குப்பதிவில் பல நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அடங்கும்.  
இதுவரை 8 கட்ட தேர்தல்களாக 502 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கெஜ்ரிவால் நேருக்கு நேர் மோதும் வாரணாசி தொகுதி உட்பட 3 மாநிலங்களில் பல தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது. 
 
இந்நிலையில் வாக்குச்சாவடிக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் , 'இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் போட்டியில் இல்லை. எனக்கும், மோடிக்கும் இடையில் தான் போட்டி என்றார்.
 
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அஜய் ராய், அத்தொகுதியில் போட்டியிடுபவர்களில் தான் மட்டும் தான் வாரணாசியை சேர்ந்தவர் எனவும், அதனால் மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், அஜய் ராய் வாக்களிக்கும் போது காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை உடையில் அணிந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.