1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 26 ஆகஸ்ட் 2015 (02:51 IST)

லண்டனில் அம்பேத்கர் தங்கி இருந்த வீட்டை வாங்குவதில் எந்த சிக்கலும் இல்லை: அமைச்சர் ராஜ்குமார் பதோலே

லண்டனில் அண்ணல் அம்பேத்கர் தங்கிருந்த வீட்டை வாங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் விரைவில் அந்த வீடு வாங்கப்படும் என்றும் மகாராஷ்டிரா அமைச்சர் ராஜ்குமார் பதோலே தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, மகாராஷ்டிரா மாநில சமூகநீதித்துறை அமைச்சர் ராஜ்குமார் பதோலே கூறுகையில்:-
 
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வகுத்தவர் அண்ணல் அம்பேத்கர். அவர், லண்டனில் கல்வி கற்ற போது, அங்கு, அவர் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.  அந்த வீட்டை வாங்கும் செயலில் சில தடைகள் இருந்தது உண்மைதான். அவைகள் நிரந்த தடைகள் அல்ல. தற்காலிகமானவை தான். அவை விரைவில் களையப்படும்.
 
அந்த வீட்டை வாங்க மகாராஷ்டிரா அரசு உறுதியான முடிவு எடுத்துள்ளது. அந்த வீட்டை வாங்க கடைசி நாள் என்று எந்த அறிவிப்பும் இல்லை. இதனால், இன்னும் சில நாட்களில் அந்த வீட்டை மகாராஷ்டிர அரசு சட்டப்படி வாங்கும். இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.
 
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த 15 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த போது, இதில், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இதில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம். இறுதியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.