1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 27 நவம்பர் 2014 (12:56 IST)

2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை: தற்கொலை என சிபிஐ அறிவிப்பு

உத்திரப்பிரதேசத்தில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு தூக்கில் தொங்கவிடப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில், தற்கொலை என சிபிஐ அறிவித்துள்ளது.
 

 
உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பதான் மாவட்டத்தில், கடந்த மே மாதம் 2 சிறுமிகள் ஒரே மரத்தில் தூக்கில் பிணமாகத் தொங்கினர். இது தொடர்பாக காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், மாநில காவல் துறை துணை ஆய்வாளர் தலைமையில் 20 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு, சம்பவம் நடந்த பகுதியில் விசாரணை நடத்தியது. மேலும், இவ்வழக்கில் தொடர்பிருப்பதாகக் கைது செய்யப்பட்ட இரண்டு காவலர்கள் உட்பட 5 பேரிடம் விசாரணை நடத்தி வந்தது.
 
இரு சிறுமிகளும் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரோடு தூக்கில் தொங்கவிடப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
 
ஆனால், இச்சம்பவம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்துள்ள சிபிஐ, இரண்டு சிறுமிகளும் கொல்லப்படவில்லை என்றும், அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.
 
சிபிஐ அதிகாரிகளின் அறிக்கை, கிராம மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.