வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (17:39 IST)

அடிபம்பில் குளித்து முடியை இழந்த குடும்பம் : பீகாரில் வினோத சம்பவம்

தெருவில் உள்ள அடிபம்பில் தண்ணீர் பிடித்து குளித்ததால், ஒரு குடும்பமே தங்களது முடியை இழந்த வினோத சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.


 

 
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தில்  முகமது ஹசீம் என்பவர் தனது மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவர்கள் எப்போதும் அவர்கள் வசிக்கும் தெருவில் உள்ள அடிபம்பில் தண்ணீர் பிடித்து குளிப்பதுதான் வழக்கம்.
 
அதேபோல், சமீபத்தில் அந்த பம்பில் தண்ணீர் பிடித்து குளித்துள்ளனர். அதன் பின் அவர்கள் எல்லோருக்கும் தலையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தலையிலிருந்து முடிகள் கொஞ்சம் கொஞ்சமாக கொட்ட தொடங்கியுள்ளது. கடைசியில் எல்லா முடிகளும் கொட்டி, தலை மொட்டை அடித்தது போல் ஆகிவிட்டது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே ஒரு மருத்துவரிடம் சென்று விசாரித்தனர்.
 
அவர்கள் குளித்த தண்ணீரில்தான் ஏதோ பிரச்சனை என்பதை யூகித்த அந்த மருத்துவர், உடனடியாக இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் உடனே அந்த இடத்திற்கு சென்று அந்த தண்ணீரை ஆய்வு செய்தனர்.
 
மேலும், அந்த அடிபம்பு உடனடியாக சீல் வைக்கப்பட்டது. யாரும் அதிலிருந்து தண்ணீர் பிடிக்க வேண்டாம் என்று அந்த கிராம பஞ்சாயத்தார் அறிவுறுத்தியுள்ளனர். 
 
தலைமுடியை இழந்த அந்த குடும்பத்திற்கு, புதிதாக ஒரு அடிபம்பு அமைத்துக் கொடுக்க பஞ்சாயத்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.