வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: வியாழன், 10 ஜூலை 2014 (20:51 IST)

கிராமங்களில் பிராட்பாண்ட் சேவை கிடைக்க ரூ.500 கோடி - மத்திய அரசு புதிய திட்டம்

கணினி வசதி உள்ளவர்கள் மற்றும் கணினி வசதி இல்லாதவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க 'கணினிமய இந்தியா' திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது. இத்திட்டம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் செயல்படுத்தப்படும். அனைத்துக் கிராமங்களும் பிராட்பாண்ட் சேவை பெற்று, இணைய வசதியுடன் இருப்பதை இத்திட்டம் உறுதி செய்யும். அரசின் சேவைகளை மக்களிடம் எளிதில் சேர்ப்பதோடு, இது அரசு செயல்படுகளின் வெளிப்படைத் தன்மையையும் உறுதி செய்யும்.
 
இத்திட்டம், நாட்டில் கணினியின் மென்பொருள் மற்றும் வன்பொருள் உற்பத்தியை மேற்கொள்ள வழிவகுக்கும் என்றும் இதற்காகச் சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். 
 
இதோடு தேசிய கிராமப்புற இணையம் மற்றும் தொழில்நுட்ப இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். இது கிராமப்புரங்களில் உள்ள பள்ளிகளில் பயில்பவர்களின் திறனை அதிகரிக்கும். 
 
மேலும், அரசு சேவைகளைக் கொண்டு சேர்க்கவும், அரசாட்சி திட்டத்தை அமலாக்கவும் 'ஈ-கிராந்தி' எனும் 'இணைய புரட்சி' அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக ஆரம்ப நிதியாக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நல்லாட்சியை ஊக்குவிக்க தனித் திட்டமும் அதற்காக ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.