வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2016 (11:01 IST)

திருமணம் செய்ய மறுத்த 16 வயது மாணவி உயிரோடு எரித்துக் கொலை

படிக்க வேண்டும் என்று விரும்பியதால், திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காத 16 வயது மாணவியை அவரது தந்தை மற்றும் சித்தி ஆகியோர் தீ வைத்து எரித்த கொடூரம் பீகாரில் நடந்துள்ளது.


 

 
பீகார் தலைநகர் பாட்னாவில் புராணி பஜார் எனும் பகுதியில் வசிப்பவர்  சுனில் தாகூர். இவரின் மகள் குஷ்பு(16). மேலும் இவருக்கு அம்ரித் ராஜ் என்ற மகனும் உண்டு. சுனிலின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் அவர்களும் இருவரும். முதல் மனைவி 2001 ஆம் ஆண்டே இறந்து விட்டார். அதனால் சுனில், பூனம் தேவி என்பரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
 
குஷ்பு தனது தந்தையின் பாதுகாப்பில் இருந்துள்ளார். அவரது அண்ணன் அம்ரித் தனது பாட்டியின் அரவணைப்பில் இருந்துள்ளார். குஷ்பு அந்த பகுதியில் உள்ள பகுதியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். 
 
அவரின் தந்தையும், சித்தியும் குஷ்புவை படிப்பை நிறுத்தி விட்டு திருமணம் செய்து கொள் என்று வற்புறுத்தி வந்தனர். ஆனால் படிப்பில் ஆர்வம் இருந்த குஷ்புவோ அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இது சம்பந்தமாக குஷ்புவிற்கு அவர்கள் பல வகையில் தொந்தரவு கொடுத்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு குஷ்பு பள்ளிக்கு சென்று வந்தார். 
 
இந்நிலையில், குஷ்புவை விட வயது அதிகம் உள்ள ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்று அவரின் தந்தையும், சித்தியும் வற்புறுத்தியுள்ளார்கள். இது சம்பந்தமாக அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனால் கோபமடைந்த அவர்கள், குஷ்புவை தீ வைத்து எரித்துள்ளனர்.
 
அதனால் படுகாயம் அடைந்த குஷ்பு, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அவரது அண்ணன் அம்ரித் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
 
பள்ளி மாணவி உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.