வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 11 ஜூன் 2016 (11:31 IST)

டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் அதிரடி தீர்ப்பு - 5 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்த டென்மார்க் நாட்டை சேர்ந்த 52 வயது பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 5 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

 
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை சுற்றிப் பார்ப்பதற்காக புதுடெல்லி வந்தார். ஜனவரி 14ஆம் தேதி இரவு அவர் ரயில் நிலையம் அருகே உள்ள டிவிசன் ரயில்வே ஆபிசர்ஸ் அறை அருகே நின்று கொண்டிருந்தார்.
 
அப்போது 9 பேர்கொண்ட கும்பல் அப்பெண்ணை கத்தி முனையில் மிரட்டி, கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியது. மேலும் அவரிடம் இருந்த பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
 
புதுடெல்லி போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர். இதில் 3 பேர் சிறார் என்பதால் அவர்கள் விசாரணை சிறார் நீதிமன்ற வாரியத்துக்கு மாற்றப்பட்டது. தில்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. 27 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.
 
வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே குற்றம் சாட்டப்பட்ட ஷியாம் லால் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் இறந்தார்.
 
குற்றம்சாட்டப்பட்டிருந்த மகேந்திரா என்கிற கஞ்சா (27), முகமது ராஜா (23), ராஜூ(24), அர்ஜூன் (22), ராஜி சக்கா (23) ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி வெள்ளியன்று தீர்ப்பளித்தார்.