வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 22 செப்டம்பர் 2014 (18:07 IST)

மோடியை முஸ்லிம்கள் கை விட்டு விட வேண்டாம்: சிவசேனா

நரேந்திர மோடியை முஸ்லிம்கள் கை விட்டு விட வேண்டாம் என்று சிவசேனா கேட்டுக் கொண்டுள்ளது.
 
மேலும், முஸ்லீம்களை பிரதமர் உயர்வாக பேசியதால் இந்துத்துவா கொள்கையிலிருந்து அவர் நீர்த்துப் போய் விட்டதாக பொருள் இல்லை என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக சிவசேனா கட்சியின் 'சாம்னா' பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், "முஸ்லிம் சமுதாயத்தினரின் தேசப்பற்று மற்றும் நாட்டின் மீது கொண்டிருக்கும் அன்பு ஆகியவற்றை குறித்து பேட்டி ஒன்றில் உயர்வாக பேசிய நரேந்திர மோடியை முஸ்லிம் சமுதாயத்தினர் கை விட்டு விடக் கூடாது. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், இந்துத்துவா கொள்கையில் இருந்து அவர் நீர்த்துப் போய் விட்டதாக பொருள் இல்லை.
 
நாட்டின் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கும் நரேந்திர மோடி பிரதமர். ஆனால், அவர் மீது முஸ்லீம்களுக்கு எதிரானவர் என்ற வர்ணம் பூசப்பட்டுள்ளது. சிறுபான்மை சமுதாயமான முஸ்லீம்களில் ஒரு சிலர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதால் ஒட்டு மொத்த முஸ்லீம் சமுதாயமும் அதற்கு பொறுப்பாக முடியாது. சிவசேனாவின் நிறுவனரான மறைந்த பால் தாக்கரே கடுமையான, ஆனால் நல்ல இந்துத்வா கொள்கையாளர் என்று சிவசேனா புகழாரம் சூட்டியுள்ளது.
 
பால் தாக்கரே, தான் முஸ்லீம்களுக்கு எதிரானவர் இல்லை என்பதை எப்பொழுதும் கூறியவர். ஆனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பெற்ற வெற்றியை கொண்டாடியவர்களை தான் அவர் எப்பொழுதும் எதிர்த்தார். அத்தகைய முஸ்லீம்களைதான் அவர் துரோகிகள் என கூறினார். இல்லையெனில், நாட்டின் முஸ்லீம்கள் மீது அவர் உயரிய மரியாதை வைத்திருந்தார் என்று சிவசேனா கூறியுள்ளது.