1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (17:13 IST)

மனைவியின் இடைவிடாத செக்ஸ் தொல்லையால் கணவர் விவாகரத்து

மனைவியின் செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்ட கணவருக்கு விவாகரத்து வழங்கி மும்பை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
மும்பையை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் - யமுனா தம்பதியர் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவர்களுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.
 
சிறிது காலமே யமுனாவுடன் வாழ்ந்த நிலையில், அவரது செக்ஸ் தொல்லை காரணமாக கிருஷ்ணன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். மனைவியிடமிருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என கோரி, மும்பை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார்.
 
வழக்கில் கூறியிருந்ததாவது:-
 
திருமணமான நாள் முதல் என் மனைவி எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். அவள் அளவு கடந்த செக்ஸ் ஆசை கொண்டிருந்தார். பிடிவாத குணம் கொண்டு, மூர்க்கத்தனமாகவும், சர்வாதிகாரி போலவும் நடந்து கொண்டார். காரணமே இல்லாமல் என்னுடன் சண்டை போட்டு வந்தார்.

எனக்கு போதை ஊசி போட்டு வந்ததுடன், மது பானம் குடிக்குமாறு கட்டாயப்படுத்தினார்.
 
பாலுறவுக்கு மறுத்தபோதெல்லாம், தரக்குறைவான வார்த்தைகளால் என்னைப் பேசினார். அவரது வார்த்தைகளுக்கு பயந்தே பல நேரங்களில் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன்.
 
இடைவிடாமல் 3 ‘ஷிப்டு’களில் வேலை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தபோது கூட செக்ஸ் தொல்லை கொடுத்தார். நான் அதற்கு இணங்காவிட்டால், வேறு ஆணைத் தேடிப்போய் விடுவேன் என மிரட்டலும் விடுத்தார். என் உணர்வினைப் பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை.
 
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எனக்கு குடல்வால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து எனது மனைவி அவரது சகோதரி வீட்டில் நாம் இருந்து கொள்ளலாம் என கூறி கட்டாயப்படுத்தினார். அங்கும் அவள் எனக்கு செக்ஸ் தொல்லை தந்தார்.
 
அவரது நிலையை உணர்ந்து நான் அவரை மன நல மருத்துவரிடம் அழைத்துச்சென்று, சிகிச்சை அளிக்க விரும்பினாலும், அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. யாரிடமும் என்னைப்பற்றி சொன்னால், நடப்பதே வேறு என மிரட்டினார்.
 
இனியும் அவருடன் இணைந்து என்னால் வாழ முடியாது. எனவே எனக்கு அவரிடமிருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று வழக்கில் கூறப்பட்டுள்ளது.
 
 
வழக்கு விசாரணையின்போது யமுனா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, கிருஷ்ணனுக்கு யமுனாவிடமிருந்து விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
 
தீர்ப்பில் நீதிபதி, “இந்த வழக்கில் வழக்குதாரரின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. வழக்குதாரரின் வாக்குமூலத்தில் மாற்றம் இல்லை. எனவே அவரது வாக்குமூலத்தை ஏற்று, அவருக்கு விவாகரத்து வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை” என குறிப்பிட்டுள்ளார்.