வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 6 நவம்பர் 2019 (07:15 IST)

முடிவுக்கு வந்தது போலீசார்களின் 10 மணி நேர போராட்டம்!

டெல்லியில் சமீபத்தில் காவல்துறையினர் மற்றும் வழக்கறிஞர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் காரணமாக வழக்கறிஞர்கள் திடீரென நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காவலர்களும் போராட்டத்தில் குதித்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முதலாக போலீஸ்காரர்கள் போராடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இதனை அடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் போராடும் போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீதிக்கு வந்து போராட்டத்திற்கு ஆதரவு தந்ததால் போலீஸ்காரகளின் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது 
 
அதுமட்டுமின்றி தமிழக காவல்துறை உள்பட இந்தியாவின் பல மாநிலங்களின் காவல்துறை இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தன. மேலும் ஐபிஎஸ் சங்கமும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தது
 
நேற்று மதியம் தொடங்கிய இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது. இதனால் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த டெல்லி மாநில துணை நிலை ஆளுநர் முன் வந்ததையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து டெல்லி நீதிமன்ற வளாகத்தில் காவல்துறை அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் என்றும், தாக்கப்பட்டு படுகாயமடைந்த காவலர்களின் மருத்துவ செலவிற்கு நிதி உதவி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது 
 
இதனை அடுத்து டெல்லி போலீசார் நடத்திய 10 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டம் முடிவடைந்ததை அடுத்து டெல்லி துணைநிலை ஆளுநர் அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது, ‘தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட காவல்துறையினர், மற்றும் வழக்கறிஞர்களுக்கு, உயரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றும், இருதரப்பும் நல்லிணக்கத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.