வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 20 நவம்பர் 2014 (15:48 IST)

காதல் கலப்பு திருமணம் செய்த மகளை சித்ரவதை செய்து கொலை செய்த பெற்றோர்

டெல்லியில் காதல் கலப்பு திருமணம் செய்த மகளை ஏமாற்றி அழைத்து வந்து சித்தரவதை செய்து கொலை செய்த பெற்றோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
டெல்லி தென்மேற்கு பகுதியான கக்ரோலாவில் பாரத் விகார் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜக் மோகன் யாதவ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மகள் பாவனா யாதவ் டெல்லி வெங்கடேஷ்வரா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் இறுதி ஆண்டு படித்து வந்தார். பாவனாவுக்கும் அபிஷேக் சேத் (24) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் முதலில் பல்கலைக்கழகத்தில் சாதாரணமாக சந்தித்தனர். பின்னர் நண்பர்களாக பழகினர். நாளடைவில் அது காதலாக மாறியது. அபிஷேக் சேத் அரசு ஊழியராக பணிபுரிகிறார்.
 
இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாவனாவின் பெற்றோர் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதனால் பாவனாவும் அபிஷேக்கும் பெற்றோருக்கு தெரியாமல் டெல்லி ஆர்ய சமாஜ் கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு பாவனாவை அபிஷேக் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். புதுமண தம்பதியை அபிஷேக் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர்.
 
மகள் ஓடிப் போய் திருமணம் செய்ததால் பாவனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாவனாவின் பெற்றோர் அபிஷேக் வீட்டுக்குச் சென்று உங்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்கிறோம். தடபுடலாக திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறி ஏமாற்றி பாவானவை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டனர். வீட்டுக்கு வந்ததும் மகளிடம் காதல் திருமணத்தை ஏற்க மாட்டோம் என்று கூறி விட்டனர். உறவினர்கள் சமாதானப்படுத்தியும் பாவனா காதல் திருமணத்தில் உறுதியாக இருந்தார்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மகளை அடித்து உதைத்தனர். இதில் பாவனா பரிதாபமாக இறந்தார். உடனே பெற்றோர் பிணத்தை ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் என்ற இடத்துக்கு கொண்டு சென்று அங்குள்ள சொந்த கிராமத்தில் எரித்து விட்டனர். இந்த தகவல் கிடைத்ததும் அபிஷேக் டெல்லி காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாவனா பெற்றோர் ஜக்மோகன் யாதவ் - சாவித்திரியை கைது செய்தனர். இருவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
பாவனா வீட்டின் பக்கத்தில் வசிப்பவர்கள் கூறும்போது, பாவனாவை பெற்றோர் கொடூரமாக சித்ரவதை செய்தனர். பாம்பைவிட்டு கடிக்க வைத்ததாகவும் தெரிவித்தனர்.
 
காதலன் அபிஷேக் கூறுகையில், பாவனாவை திருமணம் செய்ததால் எங்களை கொலை செய்து விடுவோம் என்று அவளது பெற்றோரும், உறவினர்களும் மிரட்டினார்கள். பாவனாவை ஏமாற்றி அழைத்துச் சென்று மனம் மாற்றம் செய்ய முயன்றனர். அது முடியாததால் கொன்று விட்டனர் என்றார்.