வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 9 ஜூன் 2018 (08:47 IST)

திருப்பதி கோவிலை கைப்பற்ற முயற்சி: மத்திய அரசு மீது சந்திரபாபு நாயுடு திடுக் புகார்

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கூட்டணி கட்சியாக இருந்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் சமீபத்தில் மத்திய அரசில் இருந்து விலகி வந்தவுடன் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுத்தது குறித்து மத்திய அரசை முதல்வர் சந்திரபாபு நாயுடு குறை கூறி வருகின்றார். இந்த நிலையில் ஆந்திராவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திருப்பதி கோவிலை கைப்பற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.
 
ஜெகன்மோகன் ரெட்டியுடன் கைகோர்த்து திருப்பதி கோவிலை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிகள் நடப்பதாகவும் ஆனால் இந்த எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்றும் நேற்று சித்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின்போது சந்திரபாபு நாயுடு கூறினார்
 
திருப்பதி ஏழுமலையானை சாட்சியாக வைத்துதான் பிரதமர் மோடி, ஆந்திராவுக்கு சிறப்பு சலுகை தருவதாக உறுதி கூறியதாகவும், ஆனால் கொடுத்த வாக்கை பிரதமர் இதுவரை காப்பாற்றவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும் திருப்பதி கோவிலை தொல்லியல் துறை மூலம் கைப்பற்ற சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அந்த திட்டம் வாபஸ் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே ஐதராபாத்தை இழந்து தவிக்கும் ஆந்திராவுக்கு திருப்பதியும் இல்லை என்றால் அம்மாநிலத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது