வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 16 பிப்ரவரி 2019 (08:56 IST)

புல்வாமா குண்டுவெடிப்பு ; அனைத்துக் கட்சிக் கூட்டம் – மத்திய அரசு முடிவு !

காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள புல்வாமாப் பகுதியில் நேற்று நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகளால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 45 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்புப் பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி ஒருவர் 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார். மேலும் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றன.

நாட்டை உலுக்கியுள்ள இந்தத் தாக்குதலிற்கு பல்வேறு தேசியத் தலைவர்களும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.  இது தொடர்பாக பாகிஸ்தான்  குறித்துத் தெளிவான முடிவெடுக்க மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த இருக்கிறது. மோடித் தலைமையிலான நான்கரை ஆண்டுக் கால ஆட்சியில் இப்போதுதான் முதல்முறையாக தீவிரவாதத் தாக்கிதல்  குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
 

இந்தத் தாக்குதல் குறித்துக் கூறியுள்ள நிதியமைச்சர் அருண் ஜெட்லி “மிகவும் ஆதரவான நாடுகளின் பட்டியலிலிருந்து பாகிஸ்தானை இந்தியா நீக்குகிறது. இந்தச் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார். வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் அவர்களின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்காகவும் காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லி திரும்பியவுடன் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.