வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 21 ஏப்ரல் 2018 (15:33 IST)

12 வயதுக்குட்பட்ட சிறுமியை கற்பழித்தால் மரண தண்டனை - அமைச்சரவை ஒப்புதல்

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை அளிக்கும் வகையில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம்  மேற்கொள்ள மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

 
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காஷ்மீர் கத்துவா மற்றும் உபி உன்னவ் ஆகிய பகுதிகளில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 
 
மத்திய அமைச்சர் மேனகா காந்தி சிறுமி பலாத்கார வழக்கில் உள்ள குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று பொது நல வழக்கு தொடரப்பட்டது.  
 
இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை என்ற வகை செய்யும் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மேற்கண்ட சட்டத்திருத்தம் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள, பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை இந்த ஒப்புதல் அளித்தது.