வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 22 நவம்பர் 2014 (19:40 IST)

சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: தொடர் சர்ச்சையில் முலாயம் சிங்

சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் பட்டப்பகலில் சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கியதால் உ.பி.யில் கடும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
 
உத்தரப் பிரதேச மாநிலம் பாரபாங்கி மாவட்டத்தில் உள்ள ஆம்தாபூர் சுங்கச்சாவடியில் தவறான தடத்திற்குள் நுழைந்த கோசைன்காஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ. அபய் சிங்கின் காரை, சுங்கச்சாவடி ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது எம்.எல்.ஏ.வை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஆதரவாளர்கள் ஆத்திரத்துடன் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தொடர்ந்து மேலும் மூன்று கார்களில் வந்த எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் ஊழியர்களை தாக்கத் தொடங்கினர்.
 
இது தொடர்பான காட்சிகள், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை.
 
முன்னதாக முலாயம் சிங்கின் பிறந்தநாள் விழாவுக்கு அரசுப் பணம் வாரியிறைக்கப்படுவதாக பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை அடிக்கடி தெரிவிக்கும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில அமைச்சருமான ஆசம்கானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
இதற்கு பதிலளித்த ஆசம் கான், "தலிபான் தீவிரவாத அமைப்பு, தாவூத் இப்ராகிம் ஆகியோர்தான் முலாயம் சிங்கின் பிறந்தநாள் விழாவுக்காக நிதியுதவி செய்கின்றனர்" என்று எகத்தாளமாக கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.