செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bala
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2015 (14:40 IST)

பெங்களூரில் பிபீஓ பெண் ஊழியர் ஓடும் வேனில் பலாத்காரம்: பரபரப்பு தகவல்கள்

பெங்களூரில் பணி முடித்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த 23 வயது பெண் தனது சகோதரியுடன், எச்.எஸ்.ஆர் லே-அவுட் என்ற பகுதியிலுள்ள ஒரு பி.ஜி. ஹாஸ்டலில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சனிக்கிழமை வேலைக்காக எச்.எஸ்.ஆர் லே-அவுட் செல்வதற்காக, ஆட்டோவிற்காக ஒசூர் மெயின் ரோட்டில் காத்திருந்தார் அந்த பெண். அப்போது அவ்வழியாக வந்த டெம்போ டிராவலர் ஒன்று வந்துள்ளது. அதில் டிரைவரும், கிளீனரும் மட்டுமே இருந்துள்ளனர். அந்த பெண்ணை கண்ட கிளீனர் நீங்கள் எங்கே போக வேண்டும் என்று கேட்டுள்ளார். இந்த பெண், எச்.எஸ்.ஆர் லே-அவுட் செல்ல வேண்டும் என்று கூறியதும், அங்குதான் நாங்களும் செல்கிறோம் வாருங்கள் என கிளீனர் கூறியுள்ளார். ஆனால் உடனிருந்த தோழி வேண்டாம் என தடுத்தும், அந்த பெண் வேனில் ஏறியதாக தெரிகிறது.

பின்னர் கிளம்பிய வேன் திடீரென செல்லும் வழியை மாற்றி வேறு வழியில் சென்றது. இதனைக் கண்ட அப்பெண் டிரைவரிடம் கேட்டுள்ளார். அப்பெண் சத்தமிடவே கத்தியை காட்டி கிளீனர் மிரட்டியுள்ளார்.

பின்னர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு பேருந்து சென்றதும் அந்த பெண்ணை அவர்கள் பலாத்காரம் செய்தனர். இரவு ஒரு  மணியளவில் மடிவாளாவிலுள்ள பிரபல ஐயப்பன் தேவஸ்தானா அருகே அந்த பெண்ணை கீழே இறக்கிவிட்டு வேகமாக வேனை கிளப்பி தப்பியோடிவிட்டனராம்.

இது குறித்து அந்த பெண் அளித்த புகாரினைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடினர். பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட அந்த இளம்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாலியல் பலாத்கர சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்ப்பட்ட சுவடுகள் இன்னும் மறைவதற்குள் மீண்டும் இதே போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.