வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 3 டிசம்பர் 2018 (14:30 IST)

புகார் கொடுக்க சென்ற பெண்ணுக்கு தீ வைத்த கொடூரம்...

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் பாலியல் தொல்லைக்கு ஆளான இளம்பெண் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க செல்லுகையில் இரு கொடூரர்களால் தீ வைத்து எரிக்கப் பட்டிருக்கிறார். பட்டப்பகலில் ஒரு பெண் எரிக்கப்பட்ட இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இவரது ஆட்சியில் தான் இப்போது இந்த உயிரை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
 
உத்திரபிரதேசத்தில் உள்ள சீதாபூர் பகுதியில் வசித்து வருபவர் பாதிக்கப்பட்ட இளம்பெண்( 28). சென்ற வாரத்தில் இவர் தன்  வீட்டை விட்டு வெளியே கிளம்பி போகும்  போது அந்த பகுதியில் உள்ள இரு வாலிபர்களால் (ராமு, ராஜேஷ்) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நடந்து முடிந்த நிலையில் அவ்வூரில் உள்ள காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் புகாரை போலீஸார் வாங்கவில்லை என்று தெரிகிறது. இது குறித்து அந்தப் பெண் பலமுறை போலீஸாரிடம் புகார் அளிக்க சென்றும் போலீஸார் இப்புகாரை பதிவுசெய்யாமல் பாதிக்கப்பட்டவரை அலைக்கழித்துள்ளனர்.
 
மிகுந்த மன உளைச்சலுக்குள்ளான பெண் மீண்டும் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்க செல்லும்போது ராமு மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் அப்பெண்ணை போக விடாமல் தடுத்து நிறுத்தி அப்பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி எரித்திருக்கிறார்கள் .
 
தீயில் எரிந்து கதறிய அப்பெண்ணை  மீட்ட அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளனர்.
 
உடலின் முக்கால் பாகம் எரிந்த நிலையில் இளம்பெண் பரிதாபமாக சிகிச்சை பெற்றுவருகிறார். இவ்வளவு பிரச்சனை நடந்து பாதிக்கபட்ட பெண் உயிருக்கே ஆபத்து வந்த மரணத் தருவாயில்தான் லக்னோ போலீஸார் ராமு, ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
வட மாநிலங்களில் பொதுவாக பெண்களுக்கு எதிரான  அக்கிரங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்ற நிலையில் இந்த இளம்பெண் கொலை முயற்சியும் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.