வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 20 அக்டோபர் 2014 (12:09 IST)

ரூ.7 கோடிக்கு பேரம் பேசப்பட்ட முர்ரா எருமை

ஓர் எருமையை விலைக்கு வாங்க ரூ.7 கோடி வரை பேரம் பேசப்பட்டது. அவ்வளவு விலைக்கு கேட்டும் உரிமையாளர் கொடுக்க மறுத்துவிட்டார்.
 
உத்தரப் பிரதேசம் மீரட் நகரில் கால்நடைகளின் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த கரம்வீர் சிங் என்பவரின் எருமை மிகச்சிறந்த எருமையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. முர்ரா வகையைச் சேர்ந்த யுவராஜ் என்ற அந்த எருமை 14 அடி நீளமும் 5 அடி 9 அங்குலம் உயரமும் கொண்டது. அதன் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.25 ஆயிரத்தை கரம்வீர் சிங் செலவிடுகிறார்.
 
நாள்தோறும் 20 லிட்டர் பால் குடிக்கிறது. 5 கிலோ ஆப்பிள், 15 கிலோ கால்நடைத் தீவனங்களை சாப்பிடுகிறது. தினமும் 4 கி.மீட்டர் தொலைவு நடைப்பயிற்சி மேற்கொள்கிறது. யுவராஜிடம் இருந்து நாள்தோறும் 3.5 மில்லி முதல் 5 மில்லி வரை விந்தணு எடுக்கப்பட்டு 35 மில்லி வரை செறிவாக்கம் செய்யப்படுகிறது. 0.25 மில்லி கொண்ட ஒரு குப்பி விந்தணு ரூ.1500-க்கு விற்கப்படுகிறது.
 
அதனை வாங்க கரம்வீர் சிங்கின் பண்ணையில் விவசாயிகள் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் யுவராஜ் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை உரிமையாளருக்கு சம்பாதித்து கொடுக்கிறது. முர்ரா வகை எருமைகள் சராசரியாக நாளொன்றுக்கு 25 லிட்டர் வரை பால் கொடுக்கிறது. அதுவும் யுவராஜின் வாரிசுகள் அதிக வீரியமிக்கவையாக உள்ளதால் 25 லிட்டரையும் தாண்டி பால் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.