செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (12:22 IST)

தாத்ரி சம்பவத்தை பீகாரிலும் துவக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது:நிதிஷ்குமார் பகீர் குற்றச்சாட்டு

நாட்டையே உலுக்கிய தாத்ரி சம்பவத்தை பீகாரிலும் செயல்படுத்த பா.ஜ.க. முயற்சிப்பதாக அம்மாநில முதல் அமைச்சர் நிதிஷ்குமார் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.


 
 
243 தொகுதிகளை உள்ளடக்கிய பீகார் சட்டமன்றத்துக்கான பொதுத் தேர்தல் அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5 ஆம் தேதி வரை ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளன.
 
இதனை முன்னிட்டு அங்கு  தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனிடையே கால்நடை தீவன திருடன் என்று லல்லு பிரசாத்தை பா.ஜ.க. தலைவர் அமீத்ஷாவும் ,  காட்டுமிராண்டி என்று அமீத்ஷாவை லல்லு பிரசாத்தும் விமர்சித்து உள்ளனர்.
 
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் மாட்டு இறைச்சி சாப்பிட்டதாகக் கூறி முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதைப் போல பீகாரிலும் அதே போன்றதொரு சம்பவத்தை உருவாக்க பா.ஜ.க. முயற்சிப்பதாக நிதிஷ்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.
 
இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "தாத்ரி  பிரச்சனைக்கும் பீகாருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால் அதே போன்றதொரு பிரச்சனையை உத்திரபிரதேசத்திலும் பரப்ப பா.ஜ.க. முயற்சிக்கிறது. இந்த பிரச்சனை உத்திரப்பிரதேசத்தில் எவ்வாறு வெடித்தது என்பது அனைவருக்கும் தெரியும்".
 
"தாத்ரி சம்பவம் ஒரு சூதாட்டம். பீகாரில் இந்தப் பிரச்சனையை வெடிக்கச் செய்ய அவர்கள்(பா.ஜ.க.) அனைத்து திட்டங்களையும் வகுத்து வருகின்றனர். அவர்கள் இந்தப் பிரச்சனையை இங்கு பரப்பாமல் இருக்க நாங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்கிறோம். காவல்தறை மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.