பீகாரில் பாகிஸ்தான் கொடி ஏற்றம்: பாஜக போராட்டம்
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் அன்வருல் ஹக் என்பவருடைய வீட்டில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது. இதையோட்டி பாஜக கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர்.
பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரின் சொந்த மாவட்டம் நாலந்தாவில் வசிக்கும் அன்வருல் ஹக் என்பவருடைய வீட்டில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டு பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை டி.வி. சேனல்கள் படம் பிடித்து காட்டின. இதுபற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு உள்ளூர் மக்கள் புகார் செய்தனர். உடனடியாக அங்கு சென்ற காவல் துறையினர், அந்த கொடியை இறக்கி கைப்பற்றினர். இதற்கிடையே அன்வருல் ஹக் தலைமறைவாகி விட்டார். அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ஆனால் முகரம் பண்டிகையையட்டி அந்தக் கொடியை கடந்த 5 ஆண்டுகளாக ஏற்றி வருவதாக அன்வருல் ஹக்கின் மகள் சபனா அன்வர் கூறியுள்ளார்.
இதையொட்டி, பாரதீய ஜனதா கட்சியினர் பாட்னாவில் நிதிஷ் குமார் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உருவபொம்மைகளை எரித்து போராட்டங்கள் நடத்தினர்.