வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 2 ஜூன் 2014 (11:00 IST)

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நல்ல எதிர்காலத்துக்கான அறிகுறி - சோனாக்ஷி சின்கா

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்திருப்பது நல்ல எதிர்காலத்துக்கான அறிகுறி என்று இந்தி நடிகை சோனாக்ஷி சின்கா தெரிவித்தார்.
பாரதீய ஜனதா சார்பில் பீகார் மாநிலம் பாட்னா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் சத்ருகன் சின்கா. இவரது வெற்றி இவரை மட்டும் அல்லாமல், சத்ருகன் சின்காவின் மகளும், பிரபல இந்தி நடிகையுமான சோனாக்ஷி சின்காவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது தொடர்பாக நேற்று அவர் மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பதவி வகித்த காலத்தில் எண்ணற்ற பல மாற்றங்களை கொண்டு வந்தார். இந்த வேளையில், அவர் பிரதமராக பதவி ஏற்றிருப்பது, நல்ல எதிர்காலத்துக்கான அறிகுறி என்று கூறலாம்.
 
மேலும், மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 7 பெண்கள் அங்கம் வகிப்பதை அறிந்து பூரிப்பு அடைகிறேன். எனது வீட்டில் அரசியல் மற்றும் சினிமா பற்றி அடிக்கடி விவாதம் நடப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர். ஆனால், நாங்கள் எங்கள் வீட்டில் பொதுவான கருத்துகளை மட்டுமே பேசுவோம். தொழில் சார்ந்த எந்த பிரச்சனையையும் வீட்டில் வைத்து பேசுவதில்லை.
 
எனது தந்தை சத்ருகன் சின்கா மிகச் சிறந்த நபர். நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து, அவர் டெல்லி, மும்பை, பாட்னா என பயணம் செய்து கொண்டிருக்கிறார்.
 
சில நாட்களுக்கு முன்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். இருப்பினும், ஒவ்வொரு 3 அல்லது 4 மாத கால இடைவெளியில் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து வருகிறார். இதை பொதுமக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
 
இவ்வாறு நடிகை சோனாக்ஷி சின்கா தெரிவித்தார்.