செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 25 நவம்பர் 2015 (15:22 IST)

ஆட்சியில் உள்ள மாநிலத்தின் இடைத்தேர்தலிலும் பாஜக தோல்வி

ஆட்சியில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளர் தோல்வி அடைந்துள்ளது.
 

 
பாஜக சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ்குமார் தலைமையிலான மெகா கூட்டணியிடம் படுதோல்வியை தழுவியது.
 
இந்நிலையில் தெலுங்கானா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும் தோல்வியை சந்தித்திருக்கிறது.
 
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரத்லம் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் திலீப்சிங் பூர்யா காங்கிரஸ் வேட்பாளர் காந்தியா பூர்யாவை வென்றார்.
 
சமீபத்தில் திலீப்சிங் பூர்யா இறந்ததால் ரத்லம் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் ஏற்கனவே இங்கு போட்டியிட்டு தோற்ற காந்தியா பூர்யா காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டார்.
 
இவரை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில், இறந்த திலீப்சிங் பூர்யாவின் மகள் நிர்மலா பூர்யா போட்டியிட்டார். இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் காந்தியா பூர்யா 88 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 
ரத்லம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தோற்றது, முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. நிர்மலா பூர்யாவுக்கு ஆதரவாக சிவராஜ் சிங் சவுகான் 24 தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். என்றாலும் நிர்மலா பூர்யா தோற்றது பாஜக தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
அதேபோல, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரங்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில், தெலுங்கானா ராஷ்ட்ரியா சமிதி கட்சி சார்பில் போட்டியிட்ட பசுனூரி தயாகர் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும், பாஜக 3ஆவது இடத்தையும் பிடித்தது.