1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (08:18 IST)

சுயசரிதை எழுதுவது தந்தையின் சொந்த விருப்பம் - தமன் சிங்

சுயசரிதை எழுதுவது என்பது என் தந்தையின் மனநிலையைப் பொறுத்தது, அதற்காக அவரை வற்புறுத்த மாட்டேன் என்று முன்னாள்  பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் தமன் சிங் கூறியுள்ளார்.

தமன் சிங் தனது தந்தை மன்மோகன் சிங், தாய் குர்சரண் கவுர் பற்றி புத்தகம் எழுதியுள்ளார். மன்மோகன் சிங் அண்ட் குர்சரண் எனப் பெயரிடப்பட்ட அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் சில தினங்களுக்கு முன்னர் நடந்தது.

இந்த விழாவில், மன்மோகன் சிங் புத்தகத்தை வெளியிட்டார். அவரது மற்ற இரு மகள்களான உபிந்தர், அம்ரித் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், திட்டக்குழு முன்னாள் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த விழாவில், புத்தக ஆசிரியர் தமன் சிங் கூறுகையில், “இந்தப் புத்தகம், என் பெற்றோரின் வாழ்க்கையில் 1930 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை நடந்த  சம்பவங்களைப் பற்றி கூறுவதாகும்.

அவர்களின் எண்ணம், திட்டம், நம்பிக்கை, அவைகள் எப்படி உருவாகின, அவைகள் எப்படி பிற்காலத்தில் மாறின என்பதை பற்றி கூறி உள்ளேன்.

இதுதவிர 1930 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவின் நிலை, சுதந்திர போராட்டத்தில் என் பெற்றோரின் பங்கு உள்ளிட்ட பல்வேறு  விஷயங்களையும் எடுத்துரைத்துள்ளேன்.

விக்ரம் சேத் எழுதிய ‘டூ லிவ்ஸ், கணித மேதை ஜான் நாஷின் சுயசரிதையை எழுதிய சில்வியா நாடார், நேருவின் சுயசரிதையை எழுதிய எம்.ஜெ.அக்பர் ஆகியோரது புத்தகங்கள் தான் என்னையும் இந்த புத்தகத்தை எழுதத் தூண்டின.

என் தந்தை அவரது  சுயசரிதையை எழுதுவாரா என்பதை நான்கூற முடியாது. அது அவரது மனநிலையைப் பொறுத்தது. சுயசரிதை எழுதும்படி அவரை வற்புறுத்தவும் மாட்டேன்“. என்று தமன் சிங் கூறினார்.