1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 17 ஜூலை 2014 (20:05 IST)

பெங்களூரில் பள்ளி வளாகத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

பெங்களூரில் தனியார் பள்ளி ஒன்றில் பயின்று வந்த 6 வயது சிறுமி, அதே பள்ளியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரின் விப்ஜியார் மேல்நிலைப் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமியை பள்ளியில் பணிபுரியும் அடையாளம் தெரியாத நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது.

சில தினங்களுக்கு முன்னர் பள்ளிக்குச் சென்று திரும்பிய சிறுமி, உடல் நலக்குறைவோடு காணப்பட்டதால், சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவருக்கு மருத்துவர்கள் நடத்திய சேதனையின் மூலம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து இந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம், புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை கைது நடவடிக்கை எதுவும் காவல்துறையினரால் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அடையாளம் தெரியாத அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், சந்தேகத்தின் பேரில் பள்ளியில் பணிபுரியும் சிலரை கைது செய்துள்ளதாகவும் சட்டம் ஒழுங்கு காவல் ஆணையர் ஷரத் சந்திரா தெரிவித்துள்ளார்.

பள்ளி வளாகத்திலேயே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.