வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 18 செப்டம்பர் 2014 (09:07 IST)

துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் அஸ்ஸாம் மாநில முன்னாள் டிஜிபி

அஸ்ஸாம் மாநில முன்னாள் டிஜிபி சங்கர் பரூவா, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து குவாஹாட்டி நகர மூத்த காவல்துறைக் கண்காணிப்பாளர் ஏ.பி. திவாரி தெரிவித்ததாவது:-

துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் உள்ளூர் மருத்துவமனைக்கு பரூவா கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆகையால் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் தெரிவிக்க இயலாது. விசாரணை முடிவடைந்த பிறகே, முழுத் தகவலும் தெரிவிக்கப்படும்“ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் சங்கர் பரூவா அனுமதிக்கப்பட்டார். நீண்ட சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து புதன்கிழமை காலையில்தான் அவர் வீடு திரும்பியுள்ளார்.

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு, அஸ்ஸாமில் சங்கர் பரூவா பாதுகாப்பு அளித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவரது வீட்டில் சி.பி.ஐ. கடந்த மாதம் சோதனை நடத்தியது.

இதனால் மோசடியில் பரூவாவைத் தொடர்புபடுத்தி, ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டதால், மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இதுகுறித்து டெல்லியில், சி.பி.ஐ. செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பரூவாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் இல்லை. அவருக்கு சம்மனும் அனுப்பவில்லை' என்று கூறியுள்ளார்.