வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 13 ஏப்ரல் 2015 (16:31 IST)

செம்மரக் கடத்தலைத் தடுக்க இஸ்ரோ உதவியுடன் நவீன பாதுகாப்பு: ஆந்திர அரசு அதிரடி நடவடிக்கை!

திருப்பதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஆந்திர அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
 
பலியான தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் போர்க்குரல் எழுப்பியுள்ளது. நீதிமன்றமும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதால் ஆந்திர போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.
 
எனவே கடத்தல்காரர்கள் மேலும் தீவிரமாக செயல்படக்கூடும் என ஆந்திர வனத்துறையினர் கருதுகிறார்கள். இதனால் தங்களது வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை பாதுகாக்க, விரிவான திட்டத்தை ஆந்திர போலீசார் மற்றும் வனத்துறையினர் கூட்டாக எடுத்துள்ளனர்.
 
இதன்படி செம்மரக்காடுகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ உதவியுடன் நவீன தொழில்நுட்பக் கருவிகளை வனப்பகுதியில் பொருத்தப்படுகிறது. மேலும், இருட்டிலும் துல்லியமாக படம் பிடிக்கும் கேமராக்கள் வனப்பகுதி மற்றும் செம்மரக்கட்டை குடோனில் பொருத்தப்படும். இவைகளை கண்காணிக்க திருப்பதியை மையமாக கொண்டு ஒரு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும்.
 
இதன் மூலம் வனப்பகுதியில் நுழைபவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது உடனடி தாக்குதல் நடத்த முடியும் என ஆந்திர போலீசார் கருதுகிறார்கள்.
 
இது தவிர அதிரடிப்படையை போல சிறப்பு செயல் படையும் அமைக்கப்படும். இதில் பயிற்சி பெற்ற வீரர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவி, ஆயுதங்கள் வழங்கப்படும். மேலும் கடத்தல்காரர்கள் பற்றிய பட்டியல் சேகரிக்கப்பட்டு கணினியில் பதிவு செய்யப்படும்.
 
இதன் மூலம் எந்த கடத்தல் குழு வனத்துக்குள் ஊடுருவுகிறது என்பதை கண்டறிய முடியும். அவர்கள் நுழைந்ததும் அந்த பகுதியில் தயாராக நிறுத்தப்பட்டுள்ள அதிரடிப்படையினரின் சிறப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கடத்தல் காரர்களை பிடிக்க வழிவகை செய்யப்படும்.
 
ஏற்கனவே முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலமே தப்பிய கடத்தல்காரர்கள் 61 பேர் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் கூறினார்கள்.