1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: புதன், 23 ஜூலை 2014 (18:06 IST)

நாட்டின் நெல் உற்பத்தியை அதிகரிக்க, நவீன நெல் சாகுபடி முறை

நாட்டின் நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க, மாற்று முறை நெல் சாகுபடியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதன்படி செறிவூட்டப்பட்ட நெல் முறை, நேரடி விதை நெல் வரிசை நடவு முறை ஆகிய மாற்று முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம், கிழக்கு இந்தியாவிற்குப் பசுமைப் புரட்சியைக் கொண்டு வருதல், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த வேளாண் முறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரிசியின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க, அரசு நீண்ட காலத் திட்டத்தை வகுத்துள்ளது. இதன் கீழ் கலப்பின நெல் சாகுபடி, பல்வேறு சூழலைத் தாங்கும் விதை ரகங்கள், ஆகியவை இதன் கீழ் பயன்படுத்தப்படுகின்றன. இவை மட்டுமின்றி சுண்ணாம்பு, ஜிப்சம், நுண் ஊட்டச் சத்து, இயற்கை உரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மண் வளம் அதிகரிக்கப்படுகிறது.
 
இத்துடன், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு அல்லது மாநில வேளாண் பல்கலைக்கழகங்களில் ஏதேனும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டால் அதுவும் பயன்படுத்தப்படுகிறது என்று மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் டாக்டர் சஞ்சீவ் குமார் பால்யன் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.