வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: சனி, 9 ஆகஸ்ட் 2014 (14:24 IST)

சுய உதவிக் குழுக்களுக்கு மேலும் ரூ.6,000 கோடி வங்கிக் கடன்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் 2014 ஆகஸ்டு 8ஆம் தேதி, முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததாவது:
 
சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்
 
சுய உதவிக் குழு வங்கிக் கடன் இணைப்பானது, மகளிரைச் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஆற்றல் படுத்தும் ஒரு முக்கிய உயிர்நாடியாகும். கடந்த மூன்று ஆண்டுகளில், 2 லட்சத்து 37 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் 14,097 கோடி ரூபாய் கடன் உதவி பெற்று பயனடைந்துள்ளன.
 
2014-15ஆம் ஆண்டில், சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 6,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற வழிவகை செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் 2.5 லட்சம் சுய உதவிக் குழுக்கள் பயனடையும். 
 
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்
 
கடன் பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவதுடன் வங்கிக் கடன் திரும்பச் செலுத்தும் பணிகளை நிர்வகிக்க சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளரின் சேவை அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பகுதிக்கும் தலா நான்கு சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க, எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. 
 
இதன்படி, 2014-2015 ஆம் ஆண்டில் 2000 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுய உதவிக் குழு உறுப்பினர்களிலிருந்து தேர்வு செய்யப்படும் இந்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாதாந்திர மதிப்பு ஊதியமாக 2,000 ரூபாய் வழங்கப்படும். இவர்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு கல்வி கடன் வசதி, வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்துதல் மற்றும் காப்பீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். 
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.