1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 2 மே 2014 (15:05 IST)

மே 26 2ஜி ஊழல் வழக்கில் ஆஜராக தயாளு அம்மாள், ஆ.ராசா, கனிமொழிக்கு சிபிஐ நீதிமன்றம் நோட்டீஸ்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தயாளு அம்மாள், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 பேரும் மே 26 ஆம் தேதி ஆஜராகும்படி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்ட டெல்லி சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி, மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 10 பேர் மீதும், கலைஞர் டிவி உள்ளிட்ட 9 நிறுவனங்கள் மீதும் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
 
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் கலைஞர் டிவிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தனது கிளை நிறுவனங்கள் வழியாக ரூ.200 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாற்றப்பட்டுள்ளது. இந்த பணப் பரிமாற்றம் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வருவதால், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
இந்நிலையில் இப்பிரிவு சார்பில், சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்பு ஏப்ரல் 25 ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
 
குற்றப்பத்திரிகையில், மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், உறவினர் அமிர்தம், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் நிர்வாகிகள், கலைஞர் டிவி முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்ட 10 பேர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளனர்.
 
இதுதவிர, ஸ்வான் டெலிகாம், கலைஞர் டிவி, சினியுக் மீடியா, டி.பி. ரியால்டி உள்ளிட்ட 9 நிறுவனங்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் வழியாக கலைஞர் டிவிக்கு லஞ்சமாக ரூ.200 கோடி தரப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பணம் கடனாக வாங்கியது போலவும், அதை திருப்பித் தந்துவிட்டது போலவும் ஆவணங்களில் காட்ட முயன்றுள்ளனர். இவை இரண்டுமே சட்ட விரோதமானவை என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த குற்றப்பத்திரிகையை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.