1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 20 அக்டோபர் 2014 (19:28 IST)

டெல்லி பிபிஓ பெண் ஊழியர் பலாத்கார வழக்கு: குற்றவாளிகள் 5 பேருக்கும் ஆயுள் தண்டனை

டெல்லியில் பிபிஓ பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
டெல்லியில்  கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி மிஸோரமைச் சேர்ந்த 30 வயது பெண், தெற்கு டெல்லி மோதி கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு தனது சக ஊழியர் ஒருவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது ஒரு வாகனத்தில் வந்த ஐந்து பேர் அவரைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் மோங்கோல்புரி பகுதியில் விடப்பட்ட அவர் அதன்பிறகு இதுகுறித்து காவல்துறையில் புகார்  செய்தார்.
 
இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், ஷம்ஷாத், உஸ்மான், ஷாசித், இக்பால், கம்ருதின் உள்பட 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு டெல்லி  நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
 
இதனிடையே  ஷம்ஷாத், உஸ்மான், ஷாசித், இக்பால், கம்ருதின் உள்பட 5 பேரும் குற்றவாளிகள் என்று  கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் தண்டனை விபரம் அறிவிக்கப்படவில்லை.
 
இந்நிலையில், பிபிஓ பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட  வழக்கில் குற்றவாளிகள் ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து டெல்லி  நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.