1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: வியாழன், 17 ஏப்ரல் 2014 (15:17 IST)

12 மாநிலங்களில் ஐந்தாவது கட்ட விறுவிறுப்பான வாக்குப்பதிவு

நாடாளுமன்ற தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு இன்று 12 மாநிலங்களில் உள்ள 121 தொகுதிகளில் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. 

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு கர்நாடகா, ராஜஸ்தான், மகராஷ்டிரா, ஓடிஸா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர் , மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தொடங்கியது  
 
கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 
 
சுமார் 150 மில்லியன் வாக்காளர்கள் தங்களது  வாக்குகளை செலுத்திவரும் இந்த ஐந்தாவது கட்ட தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் 1,769 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 27 பேர் பெண்கள். 
 
இதில் மதியம் 2.45 மணி வரை பீகாரில் 33.41 சதவீத வாக்குகளும், மத்திய பிரதேசத்தில் 40 சதவீத வாக்குகளும், ராஜஸ்தானில் மதியம் 2 மணி வரை 37.46 சதவீத வாக்குகளும், ஒடிஸாவில் 44 சதவீத வாக்குகளும், மதியம் 1 மணி வரை ஜார்கண்டில் 41 சதவீத வாக்குகளும், மேற்கு வங்கத்தில் 60 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.  
 
நக்சல்கள் ஆதிக்கம் உள்ள பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.