1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (12:26 IST)

அரசியலை கிழித்து தொங்கவிடும் "உறியடி 2" திரைவிமர்சனம்!

கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றப்படம் உறியடி. இந்த படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்த விஜய் குமார் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவர் தற்போது இயக்கியுள்ள படம்  "உறியடி 2". இதனை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இப்படம் இன்று ( ஏப்ரல் 5)  தேதி திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் பாகத்தை போலவே இந்த படமும் வெற்றி பெறுமா என்பதை பார்க்கலாம். 

நடிகர்கள்விஜய் குமார்,விஸ்மா,சுதாகர்,ஷங்கர் தாஸ்,அப்பாஸ்
இயக்கம்:  விஜய் குமார்
சினிமா வகை: ஆக்சன் திரில்லர்
இசை: கோவிந்த் வசந்தா 
ஒளிப்பதிவு: பிரவீன் குமார்
தயாரிப்பு: 2டி எண்டர்டைன்மெண்ட் 
 
கதைக்கரு
 
பூச்சிக் கொல்லி மருந்து ஆலை என்ற பெயரில் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு கெமிக்கல் ஆலையை தமிழக மலை கிராமத்தில், அதிகாரிகள் பணம் வாங்கிக் கொண்டு தொடங்க அனுமதி அளிக்கின்றனர். பின்னர் அந்த கெமிக்கல் பேக்டரியால் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்கள் பாதிப்படைகிறது. இதனை தட்டிக்கேட்டும் கிராமமக்களை வைத்து அரசியல் ஆட்டம் ஆடும் அரசியல்வாதிகளிடமிருந்து மீண்டும் பேக்டரி மூடப்பட்டதா? மக்கள் காப்பாற்றப்பட்டார்களா? என்பது மீதிக்கதை.
 
கதைக்களம்:- 
 
இயக்குனர் விஜய் குமார் தனது முதல் படைப்பை போலவே இந்த படத்திலும் ஆழமான,அழுத்தமான கருத்தை தெரிவித்து  கிராமங்களில் நடக்கும் அரசியலை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். இப்படத்தில் கல்லூரி மாணவனாக சாதி மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்க் கொள்ளும் மாணவனாக விஜய் குமார் நடித்திருந்தார். வேலைக்கு செல்லும் இளைஞனாக மட்டுமில்லாமல், சாதி பிரச்னை , சமூக அநீதிகளை தட்டிக் கேட்டு  தன் கிராமத்திற்கு நிகழும் தீமையை தடுக்க முயற்சி செய்யும் காட்சிகளில் தியேட்டரில் கைதட்டல் பறக்கிறது
 
இப்படத்தில் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி பெரிய நடிகர்கள் யாரும் இல்லாவிட்டாலும் அந்த குறை தெரியாத அளவிற்கு அனைவரின் நடிப்பும் அற்புதமாக உள்ளது. 
 
கிராம மக்கள் கெமிக்கல் பேக்டரியால்  விஷவாயு தாக்கப்பட்டு அவதிப்படும் காட்சிகள் நெஞ்சை நம் பதைபதைக்க வைக்கிறது.அரசியல் அராஜகம்,ஆணவக்கொலை என கிராமங்களில் நடக்கும் அத்தனை மனிதாபமற்ற நிகழ்வுகளையும் தெள்ள தெளிவாய் உண்மையை உணர்ந்து கூறியிருக்கிறார் இயக்குனர் .
 
 
படத்தின் ப்ளஸ்: 
 
"கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க ஆப் இருக்கு ஆனால் என்னை சுத்தி இருக்க காத்து எப்படி இருக்குனு பார்க்க இங்க ஒன்னும் இல்லை" என விஜய் குமாரின் வசனங்கள் நெத்தியடி போன்று இருக்கிறது.மெட்ராஸ் சென்ட்ரல் சுதாகர் படம் முழுக்க வந்து தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். சமூக அநீதி மட்டுமல்லாமல், ஜாதி அரசியலை கிழித்து தொங்க விட்டுள்ளார் இயக்குனர் விஜய் குமார். 
 
 
படத்தின் மைனஸ்: 
 
படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே கதைக்குள் சென்றாலும் பின்னர் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு தெரிந்தது. இப்படத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் காதுகளுக்கு இரைச்சல்களை கொடுத்தது.
 
இறுதி அலசல்:- 
 
மொத்தத்தில் சில குறைகள் இருந்தாலும் மீண்டும் ஒரு முறை தனது நல்ல கருத்தின் மூலம் சரியாக உறியடித்துள்ளார் விஜய் குமார்.
 
இப்படத்திற்கு வெப்துனியாவின் மதிப்பு: 2.7\5