வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 2 டிசம்பர் 2016 (14:29 IST)

சைத்தான் - திரைவிமர்சனம்

ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறாவராக வருகிறார் விஜய் ஆண்டனி. அவருக்கும் அருந்ததி நாயருக்கும் திருமணம் ஆகிறது. திருமணமாகி சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில், விஜய் ஆண்டனிக்கு மட்டும் அடிக்கடி ஒரு குரல் கேட்கிறது. அந்த குரல் அவரை தற்கொலை செய்ய தூண்டுகிறது. இந்த வசியக் குரலின் தாக்கத்தால் பலமுறை விஜய் ஆண்டனி தற்கொலைக்கு முயல்கிறார். ஒவ்வொருமுறையும் அவரது நண்பர்கள் அவரை காப்பாற்றி விடுகின்றனர்.

 
 
இந்நிலையில், தனது நண்பர் முருகதாஸுடன் காரில் செல்லும்போது, விஜய் ஆண்டனியை அந்த குரல் மீண்டும் தற்கொலைக்கு தூண்டுகிறது. அப்போது காரை விபத்துக்குள்ளாக்குகிறார் விஜய் ஆண்டனி. இந்த விபத்தில் நண்பன் முருகதாஸ் இறந்துபோக, விஜய் ஆண்டனி மட்டும் தப்பிக்கிறார். 
 
பின்னர் தனது அலுவலக மேலதிகாரியான ஒய்.ஜி.மகேந்திரனிடம் இதனைப் பற்றி சொல்கிறார். ஒய்.ஜி.மகேந்திரன், விஜய் ஆண்டனியை மனோதத்துவ நிபுணரான கிட்டுவிடம் அழைத்துச் செல்கிறார். கிட்டு, விஜய் ஆண்டனியின் ஆழ்மனத்திற்குள் ஊடுருவி விசாரிக்கையில், பூர்வ ஜென்மத்தில் விஜய் ஆண்டனி, ஆசிரியராக இருந்ததாகவும், அவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்ததாகவும் அவள் விஜய் ஆண்டனிக்கு துரோகம் செய்துவிட்டு, அவரை கொலை செய்துவிட்டதாகவும், இதனால் இந்த ஜென்மத்திலும் அவரை பின்தொடர்ந்து தற்கொலை செய்ய தூண்டுகிறாள் அவரது முன்னாள் மனைவி ஜெயலட்சுமி.
 
ஜெயலட்சுமி தஞ்சாவூரில் இருப்பதாக அறிந்து அவரைத் தேடி அங்கு செல்கிறார் விஜய் ஆண்டனி. அப்போது, அங்கு பழைய ஜெயலட்சுமியின் போட்டோ இவருக்கு கிடைக்கிறது. அந்த ஜெயலட்சுமியின் புகைப்படம் தன்னுடைய மனைவியின் முகத்தோடு ஒத்துப்போவதை பார்த்து அதிர்ச்சியடைகிறார் விஜய் ஆண்டனி. இறுதியில், விஜய் ஆண்டனி அந்த ஜெயலட்சுமி யார் என்பதை கண்டறிந்தாரா? உண்மையிலேயே அவரால்தான் விஜய் ஆண்டனிக்கு தற்கொலை தொந்தரவு உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பதை திரில்லரும், எதிர்பார்ப்புகளுடன் கதை நகர்கிறது.
 
இப்படத்தின் கதை முழுவதும் விஜய் ஆண்டனியை மையப்படுத்தியே கதை நகர்கிறது. பூர்வ ஜென்மத்தில் வரும் ஆசிரியராகட்டும், இன்றைய ஜென்மத்தில் வரும் சாப்ட்வேர் இன்ஜினியராகட்டும் இரு வேறு கதாபாத்திரத்தின் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
 
இப்படத்தில் வரும் "கொல்லு கொல்லு... " , " நீ யார் தெரியுமா..." , உள்ளிட்ட பாடல்கள் விஜய் ஆண்டனியின் இசையில் ஒவ்வொன்ரும் ரசிக்கும்படியாக உள்ளது. அருந்ததி நாயர் பார்க்க மிகவும் அழகாக மனைவியாக வருகிறார். கிட்டு, ஒய்.ஜி.மகேந்திரன், முருகதாஸ் என படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான கதாபாத்திரங்களும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ரிட்டயர்டு, ஏட்டு ஆறுமுகமாக சாருஹாசன், அம்மாமீரா கிருஷ்ணன் உள்ளிட்ட ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள். 
 
இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தனது முதல் படத்திலேயே வித்தியாசமான ஒரு புது முயற்சியை கையிலெடுத்திருக்கிறார். படத்தின் முதல் பாதியில் என்ன நடக்கும்? ஏது நடக்கும்? என்ற திகிலுடன் கூடிய எதிப்பார்ப்பை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். 
 
படத்தில் முதல்பாதியில் போடும் புதிருக்கு இரண்டாம் பாதியில் பதில் வருகிறது. பிரதீப் கலிபுரயாத்தின் ஒளிப்பதிவு  பாராட்டுகுறியது. ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அழகாக படமாக்கியிருக்கிறார்.
 
மொத்தத்தில் ‘சைத்தான்’ அனைவரையும் இருக்கையில் அமரவைத்தான். ரசிக்கும்படியாக உள்ளது.