வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Sasikala
Last Updated : சனி, 3 டிசம்பர் 2016 (12:01 IST)

மாவீரன் கிட்டு - திரைவிமர்சனம்

ஜாதி பிரச்சனை உச்சத்தில் இருந்த 1980-களில் நடக்கும் சம்பவத்தை கொண்டு எடுக்கப்பட்ட படம் மாவீரன் கிட்டு. பழனி அருகில் உள்ள கிராமத்தில் கீழ் ஜாதியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் இறக்க, அவருடைய பிணத்தை மேல் ஜாதியினர் வசிக்கும் பகுதி வழியாக எடுத்துச் செல்வதற்கு மேல் ஜாதியைச் சேர்ந்த தலைவர் நாகிநீடு வெள்ளங்கி மற்றும் ஊர்க்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.


 


இதனால், அவர்களுக்கு எதிராக கீழ் ஜாதியைச் சேர்ந்த பார்த்திபன் போராடி, தங்கள் ஊர் தலைவரின் உடலை மேல் ஜாதியினர் பகுதி வழியாக எடுத்துச் செல்ல வழிவகை செய்கிறார். இந்நிலையில், கீழ் ஜாதியை சேர்ந்த விஷ்ணு விஷால், பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவனாக தேர்ச்சி பெறுகிறார். அவரை கலெக்டர் ஆக்கவேண்டும் என்று பார்த்திபன் முயற்சி செய்கிறார்.

கீழ்ஜாதியை சேர்ந்த விஷ்ணுவிஷால் பெரிய ஆளாக வளர்வது மேல் ஜாதிக்காரர்களுக்கு பிடிக்கவில்லை. அதே நேரத்தில், மேல் ஜாதியைச் சேர்ந்த ஸ்ரீதிவ்யாவின் அப்பா, கீழ் ஜாதிக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, ஸ்ரீதிவ்யாவின் அப்பாவை மேல் ஜாதிக்காரர்களே கொலை செய்துவிட்டு, அந்த கொலைப் பழியை விஷ்ணுவிஷால் மீது போட்டு, கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.
 
பின்பு ஜாமினில் வெளியே வரும் விஷ்ணுவிஷாலை உயர் சாதியை சேர்ந்த போலீஸ் அதிகாரியான ஹரிஷ் உத்தமன் மீண்டும் விசாரணை என்ற பெயரில் ஜெயிலுக்கு கொண்டு சென்று அடித்து உதைக்கிறார். இதன்பிறகு விஷ்ணு மாயமாகிறார். அவர் எங்கு சென்றார் என்று ஊரே தேட ஆரம்பிக்கிறது. இனியும் அமைதியாக இருந்தால் சரிப்பட்டு வராது என்று மேல் ஜாதிக்காரர்களுக்கு எதிராக திட்டம் ஒன்றை தீட்டி தனது போராட்டத்தை தொடங்குகிறார் பார்த்திபன். இந்த போராட்டம் வெற்றி பெற்றதா? மாயமான விஷ்ணு விஷால் கிடைத்தாரா? என்பதே மீதிக்கதை. 
 
மாவீரன் கிட்டு என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு விஷ்ணு விஷாலுக்கு இப்படத்தில் கம்பீரமான கதாபாத்திரம். அதை தனது இயல்பான நடிப்பால் நடித்து கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். ஸ்ரீதிவ்யா பாவாடை தாவணியில் கிராமத்து பெண் மாதிரி வந்து, பெரிய சாதிப்பெண்ணாக பக்காவாக பளிச்சிட்டிருக்கிறார்.
 
காமெடி நடிகர் சூரி, காமெடி எதுவும் செய்யாமல் தன்னை ஆளாக்கிவிட்ட சுசீந்திரனுக்காக அடக்கி வாசித்திருக்கிறார். மேல்ஜாதி போலீஸ் ஹரீஷ் உத்தமனும் , அவரது பிரசிடென்ட் அப்பா நாகி நீடுவும் மேல் ஜாதி வில்லத்தனத்தில் பக்கா. ஸ்ரீதிவ்யாவின் அப்பாவாக வந்து அகால மரணமடையும் 'கயல்' பெராரே, சூப்பர் குட் சுப்பிரமணி.
 
டி.இமானின் இசையில் இனிய ராகம். பின்னணி இசையும் பிரமாதம். கண்ணடிக்கலை கைபிடிக்கலை ... " உள்ளிட்ட பாடல்கள் நம்மை முனுமுனுக்க வைக்கிறது. கே.. ஆர். சூர்யாவின் ஒளிப்பதிவில் பழைய மதுரை மாவட்ட பழனி பகுதிகள் பளிச்சிடுகிறது.
 
சுசீந்திரனின் எழுத்து, இயக்கத்தில் எக்கச்சக்க புரட்சிகாட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. ஆனாலும், ஜாதிய வேறுபாடுகளை இன்றும் மறக்காமல் நடைபெறும் ஜாதிய கொலைகளில் இருந்து அறியலாம். இனி எத்தனை படங்கள் எடுத்தாலும் மறையுமா ஜாதி என்பது கேள்விகுறியாகவே உள்ளது..? இருந்தாலும் சபாஷ் சொல்ல தோன்றுகிறது.
 
மொத்ததில் ‘மாவீரன் கிட்டு’ ஜாதிவெறி பிடித்தவற்கு குட்டு தருவதோடு, போராடி வெல்வான்.