1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 28 அக்டோபர் 2016 (13:03 IST)

கொடி - திரை விமர்சனம்

கருணாஸ் இந்த படத்தில் காது கேட்காத, வாய் பேசமுடியாதவர். அவருக்கு அரசியலில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆசை. ஆனால், அவருடைய ஊனத்தால் அவரால் அரசியலில் சாதிக்க முடியவில்லை. அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்றுநினைக்கிறார்.



எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்சியில் இருக்கும் கருணாஸ், ஒருமுறை விஷவாயு தொழிற்சாலையை மூடுவதற்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் தீக்குளித்து இறந்துசுடிகிறார். அவருடைய மூத்த மகன் தனுஷ் பெரியவனான பிறகு தனது அப்பாவின் ஆசைக்காக கருணாஸ் இருந்த கட்சியிலேயே சேருகிறார். இளைய தனுஷ் கல்லூரி பேராசிரியராக வருகிறார்.
 
இளம் வயதிலிருந்தே எதிர்கட்சியில் இருக்கும் திரிஷா மீது அரசியல்வாதி தனுஷுக்கு காதல். கல்லூரி பேராசிரியரான மற்றொரு தனுஷ், லெக்கான் கோழி முட்டையை டீத்தூளில் நனைத்து நாட்டுக் கோழி முட்டை என்று விற்று வரும் அனுபமா பரமேஸ்வனை காதலிக்கிறார். அவள் ஏன்? அப்படி ஏமாற்றி விற்கிறார் என்று தனுஷ் கேட்கையில், தனது ஏரியாவில் இருக்கும் விஷவாயு தொழிற்சாலையை மூடுவதற்காக நிறைய பணம் தேவைப்படுவதால் அதற்காகத்தான் இந்த மாதிரியான ஏமாற்று வேலையை செய்து வருவதாக அனுபமா கூறுகிறார். இதைக் கேட்கும் தனுஷ், தனது அண்ணான அரசியல்வாதி தனுஷிடம் இதைப்பற்றி சொல்கிறார்.
 
அந்த தொழிற்சாலையை மூடுவதற்காகத்தானே எனது அப்பா உயிரை விட்டார் என்பதை உணர்ந்து அதற்காகப் போராடிகிறார். பல கோடிகளை லஞ்சமாக வாங்கிக் கொண்டு அந்த தொழிற்சாலையில் உள்ள விஷவாயுக்களை அப்புறப்படுத்தாமல் விட்டதற்கு உடந்தையாக இருப்பது தனுஷுக்கு தெரிய வருகிறது. இடைத் தேர்தல் நெருங்கி வருவதால் இந்த பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று தனுஷை எஸ்.ஏ.சந்திரசேகர் சமாதானப்படுத்துகிறார். வருகிற தேர்தலில் தனுஷுக்கு பதவி கொடுப்பதாகவும், அந்த பதவியை வைத்து அந்த தொழிற்சாலையில் உள்ள விஷவாயுக்களை அப்புறப்படுத்துமாறும் கூறுகிறார்.
 
தனுஷ் இந்த விஷயத்தை எதிர்க்கட்சியை சேர்ந்த தனது காதலி திரிஷாவிடம் சென்று கூறி மனவேதனைப்படுகிறார். ஆனால், அரசியல் வேறு, காதல் வேறு என்று இருக்கும் திரிஷாவோ இந்த விஷயத்தை பொது மேடையில் போட்டு உடைக்கிறார். இதனால் கட்சி தலைமைக்கு தனுஷ் மீது கோபம் ஏற்படுகிறது.
 
இந்நிலையில், இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர்களை கட்சி தலைமை அறிவிக்கிறது. அப்போது தனுஷின் பெயரும் அந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுகிறது. அவர் எதிர்க்கட்சியில் இருக்கும் தனது காதலி திரிஷாவை எதிர்த்து போட்டியிடுகிறார். அதேநேரத்தில், பேராசிரியர் தனுஷை கொலை செய்வதற்கு ரவுடி கும்பல் ஒன்று கிளம்புகிறது.
 
இறுதியில், கோபம் கொண்ட கட்சி தலைமை தனுஷுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்ததன் காரணம் என்ன? தனது காதலியை எதிர்த்து தனுஷ் வென்று விஷவாயு தொழிற்சாலையை அப்புறப்படுத்தினாரா? தம்பியை கொலைசெய்ய கிளம்பும் கொலை கும்பலை ஏவிவிட்டது யார்? தனது தம்பியை அரசியல்வாதி தனுஷ் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதி உள்ள கதை.
 
தனுஷ் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கிறார். ஆக்ஷன், ரொமான்ஸ் என இரண்டிலும் அவரது தனித்தன்மை இந்த படத்திலும் பளிச்சிடுகிறது. அரசியல்வாதியாக திரிஷாவுக்கு இப்படத்தில் பலமான கதாபாத்திரம். மேடைப் பேச்சாளராக தனது நடிப்பை ரொம்பவும் அழுத்தமாக பதிவு செய்துல்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர்தான். ஒரு அரசியல்வாதிக்கே உரிய மிடுக்கு இவரிடம் அதிகமாகவே தோன்றுகிறது. அதேநேரத்தில், ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் மிகவும் மென்மையான அரசியல்வாதியாக மனதில் அழகாக பதிந்திருக்கிறார். தனுஷின் அப்பாவாக வரும் கருணாஸ் ஆரம்பத்தில் ஒருசில காட்சிகளே வந்தாலும், காது கேட்காத, வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இவருடைய மனைவியாக வரும் சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
 
வெங்கடேஷ் எஸ் ஒளிப்பதிவு  படத்தை சுவாரஸ்யமாக கொண்டுசெல்ல உதவியிருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்திற்கு பலமாக இருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
 
மொத்தத்தில் கொடி பட்டொளி வீசி பறக்கிறது.