வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Updated : வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (12:36 IST)

சிங்கப்பெண் ஜோதிகாவின் "ஜாக்பாட்" திரைவிமர்சனம்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஜோதிகா அதில் தொடர்ச்சியான பல வெற்றிகளையும்  கொடுத்து வருகிறார். பெண்களின் சுதந்திரம் சமூக அக்கறை என ஹீரோவுக்கு நிகராக தன்னை வெளிப்படுத்தி மாஸ் காட்டி வந்த ஜோதிகா தற்போது ஆக்ஷன் ஹீரோயினாக "ஜாக்பாட்" படத்தில் நடித்துள்ளார். இப்படமும் அவரது வெற்றிப்படங்களின் லிஸ்டில் இணையுமா என்பதை இந்த விமர்சனத்தில் பார்த்துவிடலாம். 


 
படம்: ஜாக்பாட் 
இயக்குனர்: கல்யாண் 
தயாரிப்பாளர்: சூர்யா 
நடிகர்கள்: ஜோதிகா,ரேவதி,ஆனந்த்ராஜ் , யோகி பாபு, 
இசை: விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு: RS ஆனந்தகுமார் 
 
கதைக்கரு:  
 
காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள ஜாக்பாட் படத்தில் ஜோதிகா, ரேவதி இருவரும் சேர்ந்துக்கொண்டு பைக் திருடுவது, பொது இடத்தில் மக்களை ஏமாற்றி பணம் வசூலிப்பது என குறுக்கு வழிகளில் பணத்தை சம்பாதித்து அடால்தடியான வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வருகின்றனர். பின்னர் ஒரு திருட்டு கேஸில் ஜெயிலுக்கு போன இவர்களுக்கு அடித்தது டபுள் தாமாக்கா லக். ஆம் அள்ள அள்ள குறையாத அக்ஷய பாத்திரத்தை ஆனந்த்ராஜின்  வீட்டில் இருப்பதாய் அறிந்த ஜோதிகாவும் ரேவதியின் ஆனந்தராஜின் வீட்டிற்கு சென்று அவரை மீறி அந்த பாத்திரத்தை கைப்பற்றினார்களா என்பதை செம்ம காமெடி கலாட்டாவுடன் தூள் கிளப்பியுள்ளனர். 
 
கதைக்களம்
 
அடடா...ஆனந்த்ராஜ் உங்களுக்கு இவ்வளவு திறமையா என்று வியந்துபோகுமளவிற்கு அவ்வளவு அருமையாக தனது கதாபாத்திரத்தை காமெடியால் சித்தரித்துள்ளார் ஆனந்த்ராஜ். வில்லன் கதாபாத்திரத்தில் வெளுத்துவாங்கிய அவரை இப்படி வச்சு செஞ்சுட்டிங்களேம்மா என்று கேட்குமளவிற்கு ஜோதிகா, ரேவதியின் நடிப்பும் பிரம்மாதம். 
 
தில்லாலங்கடி வேலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போன ஜோதிகா மற்றும் ரேவதிக்கு அங்கிருக்கும் பாட்டி ஒருவர் அள்ள அள்ள குறையாத செல்வங்களுடன் ஒரு இடத்தில் புதைத்து வைத்துள்ளதாக கூற, உடனே அதை தோண்டியெடுக்க படையெடுக்கின்றனர் லேடி கிள்ளாடிஸ். பின்னர் தான் தெரிகிறது அது ஆனந்தராஜின் வீட்டில் இருக்கிறதென்று அவரை மீறி அந்தப்பாத்திரத்தை கைப்பற்ற அவர்கள் படும் பாடுகள் தான் படத்தின் கதை. 
 
படத்தின் அலசல் 
 
நடிகர் ஆனந்த்ராஜ்  ஜாக்பாட் படத்தில் பெண் போலீஸாகவும், பெண் போலீஸின் தம்பியாகவும்  ஆண்,  பெண் என இரண்டு கேரக்டரிலும் நடித்துள்ளார். 
 
இதுவரை பல படங்களில் பவ்யமான ஜோதிகா பார்த்து வந்த ஆடியன்ஸிற்கு புதுவிதமாக தோன்றி கலகலப்பாக நடித்துள்ளார். கியூட்டான நடிப்பு தைரியமான வசனம் என முழு ஆக்ஷன் அவதாரத்தில் களமிறங்கி செம்ம ஃபன் செய்திருக்கிறார். படம் முழுக்க ஜோதிகாவுடன் பயணிக்கும் ரேவதி லேடி கிங்காக நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலி கான், டைகர் தங்கதுரை என படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் காமெடியில் பின்னி எடுக்கின்றனர்.
 
படத்தின் ப்ளஸ்:
 
படம் முழுக்க ஆடியன்ஸை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடி காட்சிகளுக்கு  சமமாக வசனங்களும்   படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்து பார்த்து செய்துக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார். இப்படத்தில் பாடல்களுக்கு தனி மவுஸ் நிச்சயம் கிடைக்கும். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் ஜோதிகாவின் ஆக்ஷன் காட்சிகளுக்கு கூடுதல் விருந்தளித்துள்ளார்.  
 
படத்தின்  மைனஸ்: 
 
படத்தின் குறை என்றால் ஒண்ணே ஒன்னு தான்..  காமெடியை முக்கிய உருவமாக கையாண்டுள்ளதால் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு அவ்வளவு அழுத்தம் கொடுக்கவில்லை.  இதனால் அந்த கிளைமாக்ஸ் காட்சியை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. 
 
இறுதி அலசல்: 
 
இரண்டு லேடிக்களின் லந்துக்களை பார்த்து முழுக்க முழுக்க இரண்டரை மணி நேரம் சிரித்துவிட்டு வெளியே வரலாம். எனவே இந்த வராம் குடும்பத்துடன் சென்று படத்தை பாருங்கள்.

ஜாக்பாட் படத்திற்கு வெப்துனியாவின் மதிப்பு : 3.9 \5