வெள்ளி, 29 மார்ச் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. காதல் தேசம்
  4. »
  5. க‌ட்டுரை
Written By Webdunia

அவள் எனக்கு என்ன உறவு?

சிரவணன்

"நீங்கள் காலைல எத்தனை மணிக்கு எழுந்திறிப்பீங்க?" என் கால் விரல்களைப் பார்த்தபடி மரகதம் கேட்டாள்.

"எதுக்கு கேக்குற?"

"அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து நீங்கள் படிச்சுட்டு இருக்கிறத பார்த்தேன். அம்மா இன்னைக்கு என்னதான் கோலம் போடச் சொன்னாங்க. அப்ப பாத்தேன்."

"ஓ... அப்படியா..." வேண்டுமென்றே ஆர்வம் இல்லாதது போல் பதிலளித்தேன்.

"காலைல எல்லாம் படிச்சுட்டு இருக்கீங்க... இரவெல்லாம் எழுதுறீங்க... எப்ப தூங்குவீங்க?" அவளது கேள்வி, இருபத்திரெண்டு வயது பெண்ணின் சிந்தனைப் போல் இல்லாமல், முதல் வகுப்பு மாணவி போலவே இருந்தது. நிமிர்ந்து அந்த நூற்றியொரு விழுக்காடு உண்மை நிரம்பி வழியும் கண்களைப் பார்த்தேன்...

"டேய்... அப்படி என்னடா அந்த கண்ணாடியில இருக்கு... அதையே முறைச்சுப் பாத்துட்டு இருக்க..."

திடுக்கிட்டான். தலையைத் தூக்கி ராஜாராமைப் பார்த்தான். இயல்புக்குத் திரும்பியதுபோல் நடித்தான்.

"இல்லடா... நாளைக்கு செமஸ்டர் இல்லையா... அதான் படிக்கலாமா வேணாவான்னு யோசிச்சேன்," சமாளித்தான் சிவா.

"பார்த்தா அப்படி தெரியல மச்சி... ஏதோ பிரமை புடிச்சவன் மாதிரி கண்ணாடியவே வெறிச்சு பார்த்துட்டு இருந்த. சரி, பிரஷ் பண்ணிட்டு கிளம்பு. சாப்பிட போகலாம்."

குளியலறைக்குள் சென்றவன், யோசிக்கத் தொடங்கினான்.

'தூக்கத்தில் கண்களை மூடி கனவு காண்பது இயல்புதான். ஆனால், கண்கள் திறந்து கொண்டே என்னால் கனவு காண முடிந்தது எப்படி..?'

குழாயில் தண்ணீரை திறந்துவிட்டு, டூத் பிரஷ்ஷை வாயில் வைத்தான்.

"ராஜா..."

"என்ன மச்சி... சீக்கரம் டிரஸ் சேஞ்ச் பண்ணு. கிளம்புளாம்."

"இல்லடா. நான் பிரஞ்ச் பண்ணிக்கிறேன். காலேஜ் வரலை. செமஸ்டருக்கு படிக்கப் போறேன். இன்னிக்கு கிளாஸ் அட்டண்ட் பண்றாத இல்ல."

"போடா லூசு சிவா. அத அப்பயே சொல்லியிருக்கலாம் இல்ல." முணகிக் கொண்டே கிளம்பினான், ராஜாராம்.

இடுப்பில் இருந்த துண்டினைக் கழட்டிவிட்டு உள்ளாடை அணிந்தவன், நாற்காலியில் சரிந்தான்.

மீண்டும் கண்களைத் திறந்திருந்தபோதே கனவுகள் வரத் தொடங்கின...

"கோவிந்தன்னு பெத்தவங்க வச்சப் பேர விட்டுட்டு சாரதிப் பித்தனாம். எவண்டா அவன் சாரதி? அவன் எழுதின புத்தகத்தைப் படிச்சுட்டு இவனும் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டான். ஒழுங்கா காலேஜ் முடிச்சா, மாசம் நூறு ரூபாய் சுளையா சம்பாறிக்கலாம். அக்கறை இருக்காடி அவனுக்கு."

அம்மாவிடம் என்னைப் பற்றி அப்பா திட்டிக்கொண்டிருக்கிறார்.

1973... கவிதையே கதியாக இருந்த சாரதிப் பித்தன், மகன் நிஜப் பித்தனாகக் கூடாது என்ற விழைவுடன் கண்ட போதெல்லாம் திட்டிக் கொண்டிருந்த தந்தை, கணவனிடம் 'நீங்கள் சோல்றதே சரி' என்று சொல்லிவிட்டு, சாரதிப் பித்தனின் கலைந்த முடிகளைக் கோதும் அம்மா. வீதிக்கொரு கவிஞர்களில் இவனும் ஒருவன் என்று சாரதிப் பித்தனை உதாசினப்படுத்திய பத்திரிகைகளுமபதிப்பகத்தார்களும், காயமடைந்த இதயத்தைக் கடைக்கண் பார்வையாளேயே குணப்படுத்தும் காதல் வைத்தியச்சி எதிர் வீட்டு மரகதம்...

கோவிந்தனாகப் பிறந்து சாரதிப் பித்தனாக மாறி, கவிதைகள் பல படைத்து, அவற்றில் முதல் கவிதை பிரசுரமாவதற்கு முன்னரே ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எதிரே கடைவீதியில் காளை முட்டி இருபத்து ஒன்பதே வயதில் மாண்டது வரை... கோர்வையாக அனைத்தும் ஆழ்மனதில் பதிந்துவிட்டது.

இப்போது சிவா புரிந்துகொண்டான், தான் கண் விழித்தப்படி கண்டவை கனவல்ல; அத்தனையும் நிஜம்... முற்பிறவியின் நிகழ்வுகள்!

நான் சாரதிப் பித்தனா? ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலுள்ள தமிழ் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள கவிதைகளை வடித்தவனா? இலக்கியவாதிகளின் பேச்சில் மூச்சுக்கு முந்நூறு முறை சுட்டிக்காட்டப்படுகிற கவிஞனா? உலகின் 200-க்கும் மேற்பட்ட மொழிகளில் பெயர்க்கப்பட்ட படைப்புகளுக்குச் சொந்தக்காரனா? இறந்தபின் கொடுக்கப்பட்ட பல நூறு விருதுகளுக்கு உரியவனா?

முற்பிறவியின் நிகழ்வுகள் மட்டுமல்ல; தனது முதல் படைப்பான 'காவிரி' கவிதை முதல் இறுதியில் கடைசி இரு வரிகள் முடிக்காமல் விடுபட்ட 'அவசரநிலைக்கு அவசரம்' கவிதை வரை அத்தனையும் சிவாவின் சிந்தனையில் குடிவந்துவிட்டது.

பகீரென்றது.

சாத்தியமா? உண்மையில் தம் நினைவலையில் சிக்கியிருப்பது, முற்பிறவியின் நிகழ்வுகள் தானா? ஜோதிடரை அணுகலாமா? உளவியல் மருத்துவரிடம் ஆலோசிக்கலாமா..?

இப்படி பல ஆமாக்களும் கேள்விக்குறிகளும் அவன் மனதில் நீண்டு கொண்டே சென்றன.

யோசித்தான்... சிந்தித்தான்... எழுந்தான்... நடந்தான்... அமர்ந்தான்... எழுந்தான்... தண்ணீர் குடித்தான்... அமர்ந்தான்... யோசித்தான்... சிந்தித்தான்...




முன்பிறவி நியாபங்கள் மட்டுமே மூளைக்குள் பதிவாகியிருந்தது. மூளையும் மனதும் வேறுவேறோ... தான்தான் சாரதிப் பித்தன் என்று பூரணமாக அறிந்துகொண்டானே தவிர, அந்த கவிஞனின் ஆன்மா, சிவாவிடம் இல்லை. அப்போதைய சாரதிப் பித்தனின் மன ஓட்டம், இப்போதைய சிவாவிடம் துளியும் இல்லை. சிவா சிந்திப்பது சிவா ஊடாகவே. சாரதிப் பித்தனின் வாழ்க்கை மட்டுமே சிவாவின் மனதிலே முழுமையாக பதிவாகியிருந்தது.

சாரதிப் பித்தனின் வாழ்க்கையை ஒரு சிறு குறிப்பாய் நினைவலையில் சுழற்றிப் பார்த்தான், சிவா...

கண்ணால் காண்பதை மனதால் உள்வாங்கிக் கொண்டு, அதை வார்த்தைகளால் சுவைபட வெளிப்படுத்தும் கவிஞன். நிகழ்காலம் மட்டுமின்றி, எதிர்காலம் எப்படியிருக்கும் என்று தனது கற்பனைத் திறனால் முன்கூட்டியே கணித்துக் கூறிய ஆருடன். எப்படியெல்லாம் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று பகுத்துக் கொடுத்த பகுத்தறிவாளன், வாழ்க்கையைப் பகுத்தறிந்தாலும், அதிலுள்ள ஆன்மிகக் கூறுகளை எடுத்துரைத்தவன்... சாரதிப் பித்தன்.

திருச்சி நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக காலம் கழித்த தந்தை ராஜகோபாலன். ஆடவர்களின் கால்களை மட்டுமே பார்த்துப் பேசும் தாயார் தனலட்சுமி. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என படித்து கணக்காளனாக முன்னேறிய ராமசாமி அண்ணன்... சொந்தங்களும் பந்தங்களும் நான்கு கைகளால் மட்டுமே எண்ணிவிடக்கூடியவை.

ஆனால், சாரதிப் பித்தனின் உலகம் பெரியது. இதை உணர்ந்தவள், பி.யு.சி. வரை படித்த மரகதம். சாரதிப் பித்தனின் முதல் வாசகி, முதல் சினேகிதி, முதல் மற்றும் கடைசி காதலி.

தந்தை 'உதவாக்கரை' அழைத்த போதெல்லாம், மரகதம் ஆறுதல் சொல்லாவிட்டால் கவிதைகளைப் பெற்றெடுக்காமல் விட்டுவிட்டிருப்பான், சாரதிப் பித்தன்.

விடுதலைக்கு பாடுபட்ட, அதிகம் பரிட்சயம் இல்லாத சாரதி என்ற கவிஞனின் மீதான பற்றால், சாரதிப் பித்தனானான், கோவிந்தன்.

மரகதம் மீது சினேகம் வந்தபோது, மரகதன் ஆகிவிடலாமா என யோசித்தான். ஆனால், ஏதோ ஒரு புள்ளியில் மரகதத்தை சாரதி வென்றுவிட்டதால், சாரதிப் பித்தனாகவே நீடித்தான்.

படைப்புகள் பரணுக்குச் செல்லத் தொடங்கின. பணம் பண்ணத் தெரியததால் பெற்றோர்களும் பிரியத் தொடங்கினர். அப்போதும், அருகில் இருந்து ஆராதித்தவள்தான் மரகதம்.

கவிதைத் தொழிலை விட்டுவிட்டு, மரகதத்தை அழைத்துக் கொண்டு பட்டணம் சென்று புதுக்குடித்தனம் தொடங்கலாம் என்ற நினைத்த கணத்திலேயே காலன் எதிரே வந்துவிட்டான். கடைவீதியில் நெஞ்சில் முட்டியது காளை..!

பரணில் கிடந்த படைப்புகள் எப்படி பாருக்கு வந்தது? கவிதை என்ற பெயரில் ஆரம்பத்தில் கிறுக்கியவை கூட, பாடப் புத்தகத்திலே பதிவாகியிருக்கிறதே? என் பெற்றோர்கள் மாண்டிருப்பார்களா? அதாவது நான் சாரதிப் பித்தனாக இருந்தபோது என்னை பெற்றவர்களாக இருந்தவர்கள். இல்லை, அவர்களைப் பற்றி நான் ஏன் யோசிக்க வேண்டும்? பணம் சம்பாதித்த அண்ணன் மட்டும் பிள்ளை என்று சென்றவர்களாயிற்றே அவர்கள். சாரதிப் பித்தனின் மரகதம்? ஆம், அவள் என்னவாகியிருப்பாள்? எனக்காக வாழ்வதாகச் சொன்னாளே..?

மரகதம் பற்றிய நினைவு மட்டுமே சிவாவை முழுமையாக வியாபித்தது. அவளைப் பார்க்க வேண்டும் அல்லது அவளைப் பற்றி அறிய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.

முற்பிறவி நியாபங்கள் வந்திருப்பதை யாரிடம் பகிர்ந்துகொள்ளலாம். அரசாங்கத்திடமும் மக்களிடமும் சொன்னால், சாரதிப் பித்தனுக்கு உரிய மரியாதைகளும் மதிப்புகளும் எனக்குக் கிடைக்குமா? உலகம் என்னை ஆராதிக்குமா?

இவையெல்லாம் தன்னை முட்டாளாக்கிவிடும். பைத்தியம் என்று முத்திரைக் குத்திவிடும் என்று யதார்த்தமாக சிந்தித்தான், சிவா.


நண்பன் ராஜாராமிடமாவது சொல்லிவிடலாமே? அப்போதுதான் அவனை ஸ்ரீரங்கம் அழைத்துச் செல்வது எளிதாகிவிடும்.

"ராஜா..."

"என்ன மச்சான்?"

"இந்த முன்ஜென்மம், முற்பிறவி இதுல எல்லாம் உனக்கு நம்பிக்கை இருக்காடா?"

"அதப் பத்தியெல்லாம் யோசிச்சு டைம் வேஸ்ட் பண்றதுல்லடா."

"நான் முன்ஜென்மத்துல யாருன்னு என்னாலா உணர முடியுதுடா?"

"வாட்..? ஹா ஹா... யாருடா?"

"சாரதிப் பித்தன்."

"அப்ப, நான் ஷேக்ஷ்பியர்,"

"ஜோக்கடிக்காத. சீரியஸா பேசுறேன்."

"டேய்... நேத்து டி.வி.யில் 'நெஞ்சம் மறப்பதில்லை', இல்லைன்னா 'எனக்குள் ஒருவன்' பாத்துருப்ப. இல்ல... டிவிடி-ல ஏதாவது பிரெஞ்ச், ஜெர்மென் படம் பார்த்துருப்பா. ஓவரா... கதை உடாம நாளைக்கு செமஸ்டருக்கு படி மகனே..."

"சாரதிப் பித்தனோட கவிதை சொல்லட்டுமா?"

"ஆறாங்கிளாஸ் பையன் கூடதான் சொல்லுவான். அவன் போன ஜென்மத்துல சாரதிப் பித்தனா?"

"டேய்... நான் சாரதிப் பித்தனோட புகழ் வேணுன்னு எல்லாம் விரும்பல. அவனோட காதலி, அதாவது, என்னோட போன ஜென்மத்துக் காதலிய பாக்க விரும்பறேன். வர்ற சண்டே ஸ்ரீரங்கம் போறேன். வரதா இருந்தா வா..." ராஜாவின் வாயிலிருந்த சிகரெட்டை பிடுங்கி தரையில் இட்டு அணைத்துவிட்டு அறையிலிருந்து வெளியேறினான்.

".....?!?"


திருச்சி பேருந்து நிலையத்தில் வந்தடைந்த இருவரும், ஸ்ரீரங்கம் போகும் பேருந்தில் ஏறினர்.

"டேய், இந்த சினிமால, கதைல வர்ற மாதிரி 'டேய் இந்த இடத்துக்கு நான் ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கு', 'இந்த குளத்துலதான் குளிப்பேன்', 'இந்த சலூன் கடைலதான் முடி வெட்டிப்பேன்...' இப்படியெல்லாம் டயலாக் விடக்குடாது சரியா?"

"ரொம்ப பேசாதடா... டேய்... அந்த ஆலமரம் இன்னும் இருக்கு பாருடா?" ஆர்வத்துடன் ஜன்னலோரத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மரத்தைக் காட்டினான்.

"இதத்தாண்டா நான் சொன்னேன். அந்த மரத்தை சுத்திதான் நீயும் உன் போன ஜென்மத்து ஃபிகரும் டூயட் பாடுணீங்களா?"

"ஓவரா நக்கல் பண்ணாதடா? அவங்க இப்ப எப்படி இருப்பாங்ன்னு தெரியாது. அவளுங்கு பேரன், பேத்திங்களா கூட இருக்கலாம். ஜஸ்ட் ஒரு ரிசர்ச்சுக்காக வந்துருக்கோம். கவிஞர் சாரதிப் பித்தனைப் பத்தி தெரிஞ்சா சொல்லுங்கன்னு கேளுடா."

"ஏன் நீ கேக்க மாட்டியா?"

"சொன்னா புரிஞ்சிக்க, நீயே கேளு. எவ்ளோ நேரம் பேச்சுக் கொடுக்க முடியுமோ கொடு. சாரதிப் பித்தனைப் பத்தி எவ்ளோ கேக்க முடியுமோ கேளு."

"சரிடா. பட், இங்கேயே டேரா போட்டுடாத. இன்னைக்கு ஈவினிங்கே கிளம்பணும்."

ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம்.

சிவாவும் ராஜாராமும் இறங்கினர்.

கால் பாதங்கள் சில்லிட்டன, சிவாவுக்கு. அனிச்சையாக, இடது பக்கம் அவனது கண்கள் திரும்பின. அங்கே, ஒரு சிறிய பிள்ளையார் கோயில் இருந்தது. அதே பிள்ளையார் கோயில்.

"யார்கிட்டடா அட்ரஸ் கேட்கிறது? என்ன பேரு சொன்ன? மங்கம்மாவா?"

"எதுவும் பேசாம என் பின்னால வாடா. அவங்க பேரு மரகதம்."

சிவாவின் கால்கள், அந்த விசாலமான பாதை கொண்ட கடைத் தெருவில் நடந்தன. ராஜாராம் பின் தொடர்ந்தான்.

'நான், சாரதிப் பித்தனாய் இருந்தபோது... எனக்காகவே வாழ்ந்தவள். ஒவ்வொரு எழுத்தும் காகிதத்தில் பதிவானதற்கு காரணகர்த்தா. அப்போதைக்கு என் முதலும் கடைசியுமான வாசகி. பெற்றோர்களாலும் உற்றார்களாலும் உதாசினப்படுத்தியபோது, பார்வை ஸ்பரிசத்தாலேயே என் தனிமையை விரட்டியடித்தவள். என் பிரிவை எப்படி தாங்கியிருப்பாள்.

நான் இறந்துவிட்ட பிறகு, எத்தனை வருடம் கழித்து திருமணம் செய்து கொண்டிருப்பாள்? என்னை முழுமையாக மறந்துவிட்டிருப்பாளா? நான் தான் உன் காதலன். நான் தான் முற்பிறவியில் உன் காதலன், சாரதிப் பித்தன் என்று சொல்லலாமா? அவள் சிரிப்பாள். ஒருவேளை என்னை பைத்தியம் என்று கூட நினைக்கலாம். அப்படிச் சொல்வதும் முட்டாள்தனமே.'

மனது சிந்தித்தது; கால்கள் நடந்தன; ராஜாராம் இயந்திரம் போல் பின் தொடர்ந்து வந்தான்.


"சிவா... எங்கடா போற..."

"என் பின்னால வாடா." கடைத் தெருவின் மூலையில் இருந்த ஆசாரி கடையை நோக்கி நடந்தான் சிவா. அங்கே ஐம்பது வயது மதிக்கத்தக்க, நீண்ட முடியும் புஷ்டியான கன்னமும் கொண்ட மாநிற நபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

"ஸ்ரீனிவாசன் சார், மரகதம்மா வீடு எங்க இருக்கு?" அதிர்ந்தது ஸ்ரீனிவாசன் மட்டுமல்ல; ராஜாராமும் கூட.

"யாரப்பா நீ? என் பேரு எப்படி தெரியும்?"

"இல்லைங்க... அங்க ஒரு டீக்கடைல சொன்னாங்க, உங்க கிட்ட கேட்டா, மரகதம்மா அட்ரஸ் சொல்வாருன்னு." சமாளித்தான் சிவா.

"ஓ... ஆமா, எந்த மரகதம்மா?"

"ரொம்ப வருஷத்துக்கு முன்ன, இந்தத் தெருவோட கடைசி வீட்டுக்கு முன்னாடி வீட்டுல இருந்த ராமநாதன்ற பெரியவர் இருந்தாரு. அவருகூட இங்க பெரிய அளவுல பால்பண்ணை வெச்சுருந்தாரு. அவரோட மகள்தான் மரகதம்."

ஸ்ரீனிவாசன் யோசித்தார். சிவாவை அண்ணாந்து பார்த்தார்.

"தம்பீ... நீ சொல்றது ஒரு இருபத்து அஞ்சி இருபத்து ஆறு வருஷம் முன்னாடி இருக்குமா?"

'ஆமாண்ட சக்கர' என்று ஸ்ரீனிவாசனின் தோளில் தட்டி சொல்ல வேண்டும்போல் இருந்தது.

"ஆமாங்க."

"எதுக்குப்பா கேக்குற?"

"இல்லை. நாங்க சென்னைல இருந்து வர்றோம். கவிஞர் சாரதிப் பித்தனைப் பத்தி ஆராய்ச்சி ஒண்ணு பண்ணுறோம். அவருக்கு எதிர் வீட்டுலதான் மரகதம்னு ஒருத்தங்க இருந்ததா கேள்விப்பட்டோம். அவங்ககிட்ட பேசினா நிறைய தகவல் கிடைக்கும்னு வந்தோம்."

"தம்பிங்களா இப்படி உட்காருங்க." இரண்டு நாற்காலி போடப்பட்டது. இருவரும் அமர்ந்தனர்.

"டேய் பரமு, இரண்டு கலரு வாங்கிட்டு வாடா." சிறுவனை அதட்டினார் ஸ்ரீனிவாசன்.

"தம்பி... கோவிந்தன் எனக்கும் சினேகிதன்தாம்பா. அதோ தெரியுது பாரு, அந்த ரோட்லதான் காளை முட்டி செத்தான். கவிதை கவிதைன்னு ஏதேதோ எழுதுவான். சென்னைல இருக்குற பத்திரிகைக்கு எல்லாம் அனுப்புவான். ஆனா, யாருமே அவன கண்டுகிட்டது இல்ல. மரகதம்தான் அவன் பின்னாடியே சுத்திட்டு இருப்பா.

அவன் செத்தப்புறம், அவன் எழுதி எப்பவோ அனுப்புன கவிதை ஒண்ணு ஆனந்த விகடன்ல வந்தது. அப்புறம், யாரோ ரெண்டு பேரு சென்னைல இருந்து கோவிந்தன் வீட்டுக்கு வந்தாங்க. அவன் வீட்டு பரண்ல இருந்த கவிதை பேப்பர், நோட்டு எல்லாத்தையும் தூக்கிட்டு போனாங்க. அப்புறம் பாத்தா, கோவிந்த வீட்டுக்கு பணமழை பேஞ்சுது. கவர்மென்டெல்லாம் விருது கிருதுன்னு எதேதோ கொடுத்துச்சு.."

"சரிங்க, மரகதம்..." இழுத்தான் சிவா.

"ட, அந்த பொண்ணை ஏம்பா கேக்குற. அது யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு ஒத்த கால்ல நின்றுச்சு. யாரு சொல்லியும் கேக்கல. பாவம், அவனையே நெனைச்சுகிட்டு திறிஞ்சுது. இப்ப... நம்ம திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில் இருக்கு இல்லியா... அங்க ஏதாவது படிக்கட்டு கிட்டதான் பொம்மை வியாபாரம் பண்ணிக்கிட்டு ஏதோ ஒரு குடிசைல தனியா இருக்குது."

இதயம் ஒருகணம் செயலிழந்துவிட்டது.

என்னப் பேசுவது? என்ன யோசிப்பது? என்ன செய்வது? எதுவும் தெரியாத மனநிலை.


சட்டென இயல்புக்கு திரும்பியவனாய், "சரிங்க நாங்க அப்ப அவங்கள அங்கேயே போய் பாத்துக்குறோம். கிளம்புறோம். ரொம்ப தேங்க்ஸுங்க." நழுவினான் சிவா.

திருச்சி பேருந்தில் இருவரும் ஏறி அமர்ந்தனர்.

"என்னடா எமோஷனாயிட்டியா? சாரிடா நான் உன் மேட்டரை சீரியஸாவே எடுத்துக்கல. ஆனா, அந்த ஆளப் பாத்து 'ஸ்ரீனிவாசன்'னு கூப்பிட்டதும் ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன்."

"அவரு, அப்ப என்னோட ஸ்கூல் மேட்டுடா." ஜன்னல் பக்கம் சாய்ந்த சிவாவின் மனம் ஏதேதோ யோசித்தது.

காதல்... ஏதோ கொஞ்சம் எழுதத் தெரிந்தவன். எழுத்தை காதலித்த அளவுகூட காதலிக்கப்படாத காதலி, தனது காதலுக்காக வாழ்க்கையை இழந்துவிட்டிருக்கிறாள். 'உன்னை தவிர வேற எதுவும் வேண்டாம் கோவிந்து' என்ற சொன்ன அன்றைய வார்த்தையை தவறவிடாதவள். அவள் என் மீது செலுத்திக் கொண்டிருக்கும் அன்புக்கு, நான் என்ன விலை கொடுப்பது? மரகத்தை ஏற்றுக்கொள்வதற்கு நான் இப்போது சாரதிப் பித்தனாக இல்லை. அவளை விட இருபத்து ஐந்து வயது சிவா. அவளோ ஐம்பது வயது பெண்.

இத்தனை யோசனைக்கும் மேலாக, தனக்கு அவள் இப்போதைக்கு என்ன உறவு? என்ற கேள்வியே மேலோங்கியிருந்தது.


திருச்சி மலைக்கோட்டை.

பதினேழு படிக்கட்டுகள் கூட ஏறவில்லை. மரகத்தை சிவா பார்த்துவிட்டான்.

"ராஜா... அவங்கதாண்டா." இருபது படிக்கட்டுகளுக்கு மேலே அமர்ந்திருந்த வயதான பெண்ணைப் பார்த்தபடி கூறினான்.

அருகில் நெருங்கினார்கள்.

சிவாவுக்கு வியர்த்தது. உடல் நடுங்குவது போல் இருந்தது. குரல் எழவில்லை. கசங்கிய காட்டன் சேலையைக் கட்டியிருந்த மரகதத்தின் கண்களை பார்த்தபடி எதிரே நின்றான்.

மரகதத்திடம் ராஜாராம் பேச்சு கொடுத்தான்.

அவன் ஏதேதோ கேட்டான். மரகதம் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தாள். சிவாவுக்கு ஏதும் காதில் விழவில்லை.

வறுமையில் வாடிய முகத்தைப் பார்த்தான். சாரதிப் பித்தனிடம் உதிர்க்கப்பட்ட புன்னகை முழுவதுமாக இறந்துவிட்டிருந்தது. ஆனால், அந்தக் கண்களில் மட்டும் வசீகரம் குறையவில்லை. கண்கொட்டாமல் கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். உடல் நடுக்கம் குறையத் தொடங்கின. நிதானம் வந்தது. சில நொடிகள், தன்னில் மீண்டும் குடிவந்த சாரதிப் பித்தனின் ஆன்மா நீங்கிவிட்டதுபோல் உடல் இலகுவானது.

"நாங்க பண்ற ஆராய்ச்சியில கவிஞர் சாரதிப் பித்தன்..." மரகதத்திடம் உளறிக்கொண்டிருந்தான், ராஜாராமன்.

"அம்மா..." அழைத்தான், சிவா.

நிமிர்ந்தாள், மரகதம்.