செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2019 (15:26 IST)

டம்மி வேட்பாளர்களை நிறுத்துங்கள் – தினகரனுக்கு தூது விட்டதா பாஜக ?

அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் கன்னியாகுமரி தொகுதியில் சிறுபான்மை வேட்பாளர் அல்லது டம்மி வேட்பாளரை நிறுத்த சொல்லி பாஜக வலியுறுத்தியதாக தினகரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக உள்ளது. திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமாரும் அதிமுக கூட்டணி சார்பாக பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர். இதேத் தொகுதியில் அமமுக கட்சியின் வேட்பாளர் லட்சுமணன் நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் கன்னியாகுமரி தொகுதியில் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.

இப்போது இந்த தொகுதியில் சுட்டெரிக்கும் வெயிலிலும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாஜகவினர் தன்னை தொடர்புகொண்டு கன்னியாகுமரி தொகுதியில் தங்கள் கட்சியில் இருந்து பலவீனமான வேட்பாளரை நிறுத்த சொன்னதாகக் கூறியுள்ளார்.

மேலும் ’ஜெயலலிதாவுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதாலேயே பாஜகவினருக்கு எங்கள் மேல் கோபம். ஓபிஎஸ் ஈபிஎஸ் மாதிரி நாங்கள் வளைந்துகொடுக்க மாட்டோம் என எண்ணி எங்களை ஒழித்துக்கட்ட நினைக்கிறார்கள். என் உதவியாளரிடம் தொடர்பு கொண்டு தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி தொகுதியில் சிறுபான்மையினர் அல்லது பலவீனமான வேட்பாளர்களை நிறுத்துங்கள் என்று கூறினர். அவர்கள் அனைத்து முறைகளிலும் இதுபோல தூது அனுப்புவார்கள்’ எனக் கூறியுள்ளார்.

பாஜகவினர் மீது டிடிவி தினகரன் இத்தகைய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.