வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2019 (11:39 IST)

இரும்பு மனிதர் அல்ல; கல் மனிதர் – மோடி குறித்து ஸ்டாலின் !

பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலின் மோடியைக் கல் மனிதர் எனக் கூறியுள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்துக்குக் குறைவானக் காலமே உள்ளது. தேர்தல் களம் அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தால் சூடுபிடித்துள்ளது. தேசிய அளவில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கு இடையில் வெற்றி பெறுவதில் கடுமையானப் போட்டி நிலவுகிறது. அதுபோல திமுக மற்றும் அதிமுக ஆகியக் கட்சிகளுக்கிடையே கடுமையானப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த இரு வாரங்களாக தனது தொடர் பிரச்சாரத்தை நிகழ்த்தி வருகிறார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். பிரச்சாரத்தின் ஒருக் கட்டமாக வேலூரில் இப்போது முகாமிட்டுள்ளார்.

வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் வில்வநாதன், குடியாத்தம் (தனி) தொகுதி திமுக வேட்பாளர் காத்தவராயன் ஆகியோரை ஆதரித்து வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் புறவழிச்சாலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ‘ இப்போது நடைபெற இருக்கும் தேர்தல் என்பது மத்தியில் மோடியை அகற்றவும் மாநிலத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை அகற்றவும் நடக்க இருக்கும் தேர்தல் ஆகும். 5 ஆண்டு காலத்தில் மோடி எந்த நலத்திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. ஆட்சி முடியும் தருவாயில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியுள்ளார். இனி எப்போது கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடக்குமோ தெரியவில்லை. மோடியை அவரது கட்சியினர் இரும்பு மனிதர் என்கின்றனர். ஆனால் அவர் கல் மனிதர். ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறினார். ஆனால் அதை செய்யவில்லை.’ எனக் கூறினார்.