வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2019 (10:13 IST)

உப்புமா சாப்பிட்டதாக சொன்னது யார் ? – எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி !

கலைஞரை வீட்டு சிறை வைத்து ஸ்டாலின் திமுகவின் தலைவராக ஆனார் என எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சமீபத்தில் வெளியான சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் அடங்கிய வீடியோக் காட்சி வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பியது. அதையடுத்து அந்த கொலை மற்றும் கொள்ளையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக பத்திரிக்கையாளர் சாமுவேல் ஜோசப் உள்ளிட்டோர் குற்றம் சுமத்தினர்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் கொடநாடு கொல்லை மற்றும் கொள்ளை சம்பவங்களை பற்றி பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் அது பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். திமுகவின் இந்த குற்றச்சாட்டை சமாளிப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருணாநிதியை வீட்டு சிறையில் வைத்து ஸ்டாலின் திமுக தலைவர் ஆனதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் நேற்று பிரச்சாரத்தின் போது பதிலளித்தார். அப்போது ‘அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் முதலவராக இருக்கும் போது இறந்தார்கள். அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் மறைவின் போது தினமும் செய்திக் குறிப்புகள் வெளியாகும். என்ன சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன, உடல்நலம் எவ்வாறு இருக்கிறது போன்ற விவரங்கள் மக்களுக்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டன. தலைவர் கலைஞர் முதல்வராக இருக்கும்போது இறக்கவில்லை. ஆனால் அவரது உடல்நிலை குறித்து தினமும் காலையும் மாலையும் செய்திக்குறிப்புகள் வெளியாகின. ஆனால் ஜெயலலிதா விஷயத்தில் நடந்தது என்ன ? அவரை சென்று சந்தித்த அமைச்சர்கள் வெளியே வந்து  அம்மா உப்புமா சாப்பிட்டார், டிவி பார்த்தார், செய்தித்தாள் படித்தார் என்றெல்லாம் சொன்னார்கள். அதுவும் ஒரு கோடி ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டார் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்கள்’ எனக் கூறினார்.