1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (10:42 IST)

என்னது திருச்சி இரண்டாவது தலைநகரா ? – பிரேமலதா அளித்த வாக்குறுதி !

தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திருச்சியில் நடைபெற்ற  பிரச்சாரத்தில் பேசும்போது திருச்சி இரண்டாவது தலைநகராக அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

தேமுதிகவின் அதிகாரங்கள் முழுவதும் இப்போது பிரேமலதாவிடமும் எல் கே சுதீஷிடம் வந்துவிட்டன. விஜயகாந்தை பொம்மைபோல வைத்துகொண்டு இவர்கள் இருவரும் தேமுதிகவை இயக்கி வருகிறார்கள் என்ற பேச்சு எழுந்துள்ளது. தேமுதிகவுக்காக மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு வருகிறார்.

பிரச்சாரங்களின் போது பிரேமலதா பேசும் சில விஷயங்கள் சர்ச்சைகளைக் கிளப்பி வருகின்றன. சமீபத்தில் நடந்த பிரச்சாரம் ஒன்றில் பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை. எங்களின் கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கூறியதும் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது. அதையடுத்து ‘விஜயகாந்தை போல் எச்.ராஜா மிகவும் தைரியமானவர். மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். எதற்கும் பயப்படமாட்டார். இப்படி தைரியமாக பேசும் ஆட்களிடம் உண்மை இருக்கும்.’ என மற்றொருப் பிரச்சாரத்தில் பேச அதைக்கேட்ட தேமுதிகவினரே முகம் சுழித்தனர்.

திருச்சியில் நேற்று பிரச்சாரம் செய்த போதும் இது போல சர்ச்சையான விஷயத்தைப் பற்றி பேசியுள்ளார். திருச்சி வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து பேசிய அவர் ‘தேர்தலில் வெற்றி பெற்றால் எம்.ஜி.ஆர். கனவின் படி திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வோம்’ எனத் தெரிவித்தார். மாநிலத் தலைநகரம் என்பது மாநில அரசின் கீழ் வருவது. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எப்படி மாநிலத் தலைநகரை இவர்கள் மாற்ற முடியும் என்றக் கேள்வி எழுந்துள்ளது.