வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. தலங்கள்
Written By Sasikala

திருவேற்காட்டில் அமைந்துள்ள தேவி கருமாரியம்மன் திருக்கோயில்

திருவேற்காட்டில் அமைந்துள்ள தேவி கருமாரியம்மன் திருக்கோயில்

சிவபெருமான் தேவர்களின் துன்பம் நீக்வதற்காக தேவலோகம் செல்ல வேண்டிவந்தது. அப்போது உமையாளிடம் நீயே சிவனும் சக்தியுமாகி ஐந்தொழிலையும் (ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) இந்த திருநீற்றினால் அருள்புரிவாயாக என்று கூறிச் சென்றார்.

 

 
 
அம்மையும் அகத்தியரிடம் தாம் ஆட்சி செய்ய தகுந்த இடம் வேண்டும் என கேட்க வேற்கண்ணி அருகில் வந்து இதுதான் சரியான இடம் என வேற்காட்டை சுட்டிக்காட்ட அவ்விடத்திலேயே தேவி ஏழு சக்திகளாகி 1. அந்தரக்கன்னி, 2. ஆகாயக்கன்னி, 3. பிரமணக்கன்னி, 4. காமாட்சி, 5. மீனாட்சி, 6.விசாலாட்சி, 7.கருமாரி செங்கோல் ஏந்தி காட்சி தந்தாள். இதில் கருமாரி திருவேற்காட்டில் கோயில் கொண்டு இரு உருவாய் ஆட்சி செய்தாள். பிறகு ஆறு சக்திகளும் அவரவர் இடம் சென்றனர். 
 
 
சக்தியாகிய கருமாரி இரண்டு உருவம் கொண்டாள். முதல் உருவம் பிரகாசத்துடன் இருந்தது.இரண்டாவது நீலநிறத்துடன் பெரிய உருவாக நின்றது. அதோடு மகாவிஷ்ணுக்கு காட்சி தந்தாள். இக்காட்சியை அகத்தியர் கண்டு போற்றினார். அப்போது அம்மன் அகத்தியரைப் பார்த்து முனிவா நான் உலக மக்கள் உய்வதற்காக பாம்பு உருவம் கொண்டு புற்றில் அமர்ந்து பலயுகாந்த காலங்கள் அருளாட்சி செய்வேன், கலியுகத்தில் இப்போது இருக்கும் உருவத்துடன் திருக்கோயில் பெற்று விளங்குவேன் என்று கருநாக வடிவம் எடுத்தாள். இவ்வாறு கருநாக வடிவம் எடுத்து அமர்ந்த புற்று இன்றும் இத்திருக்கோயிலின் அருகே உள்ளது.
 
சிறப்புகள்:
 
அம்மன் இத்தலத்தில் சுயம்பு என்பது விஷேசம். மிகப்பெரிய நாகப்பெரிய நாகப் புற்று உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து போய்க்கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த தலம். மிக அதிகமான வருவாயை தமிழக அரசுக்கு ஈட்டித்தரும் கோயில்களில் இது முக்கியமானது.
 
மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு.இங்கு ரூபாய் நோட்டு மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது. இந்த சந்நிதியில் நாணயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கடன் கந்து வட்டி தீர்தல், வியாதி வழக்குகளில் நொடிந்து போனவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொள்கின்றனர். பூட்டுகளை கொண்டு வந்து சந்நிதி முன்பாக பூட்டி தொங்க விட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. இப்படிச் செய்வதால் தங்கள் பிரச்சினைகள் தீர்வதாக கூறுகிறார்கள். 
 
பௌர்ணமி, செவ்வாய் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு. திருவேற்காடு தேவராம் என்ற பாடலில் ஞானசம்பந்தர் வேற்காட்டு தலத்தைப் பற்றி பாடியுள்ளார். அருணகிரிநாதரும் இத்தலம் குறித்து தனது பாடல்களில் பாடியுள்ளது சிறப்பு.