வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

ஆவி பறக்க சாப்பிடும் பழக்கம் சரியானதுதானா?

ஆவி பறக்க சாப்பிடும் பழக்கம் சரியானதுதானா?

சிலருக்கு எப்போதும் உணவுகளை சூடாக சாப்பிடுவது பிடிக்கும். சிலருக்கு ஆறியப் பின் சாப்பிடுவது பிடிக்கும், இவற்றுள் எது சிறந்தது.


 
 
‘மிதமான சூட்டில் உணவுகளை சாப்பிடுவதே நல்லது. கொதிக்க கொதிக்க உணவுகளை உள்ளே தள்ளினால் உணவுப் பாதையில் உள்ள மியூகோசா படலம் பாதிப்படையும். மியூகோசா படலம்தான் நாம் சாப்பிடும் உணவுகளை எளிதாக குடலுக்கு கொண்டு செல்ல உதவுகிறது. 
 
உணவுப்பாதையின் உணவுக்குழல் ஆரம்பித்து குடல் வரை இருக்கிறது மியூகோசா படலம். இது பாது காப்பு அரணாகவும் விளங்குகிறது. சூடான உணவுகள் அதை பாதிப்படையச் செய்வதால் எளிதில் அல்சர் வர வாய்ப்புண்டு.
 
ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டால் அதுவே எதிர்காலத்தில் புற்று நோயாகவும் மாறலாம்.  வாயில் உணவை வைத்தவுடன் உமிழ்நீர் சுரக்க ஆரம்பிக்கும். அங்கிருந்தே உணவு செரிமானத்துக்கான படிநிலைகள் ஆரம்பித்து குடலுக்கு செல்லும் போது முடிவடைகிறது. சூடான உணவுகள் சாப்பிட்டால்  செரிமானத்துக்கான படி நிலையிலும் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. வாயிலும் வயிற்றிலும் புண்களை வரவழைக்கும்.
 
குளிர்காலத்தில், உடல்நலம் இல்லாமல் இருக்கும் போது சுடுதண்ணீர் தான் குடிக்க வேண்டியிருக்கும். குடிக்கும் அளவுக்கு நன்றாக ஆற்றி, சூடு ஆறியவுடன் மட்டுமே குடிக்கவேண்டும். ஒருவருக்கு சூடாக இருப்பது இன்னொரு வருக்கு சூடாக இல்லாமல் இருக்கலாம். இவ்வளவு செல்சியஸ் சூட்டில் தான் குடிக்கவேண்டும் எனத் துல்லியமாக சொல்லவும் முடியாது.
 
உணவை தட்டில் கொட்டி சற்று ஆறியவுடன் சாப்பிடுவதே சிறந்தது. அதே போல காபி அதிகமாக குடிப்பவர்களுக்கும் மியூகோசா படலம் பாதிப்படையும். காபியில் உள்ள கஃபைன் என்ற வேதிப்பொருள் மியூகோசாவை அழற்சி அடையச் செய்யும். எனவே, இரண்டு தடவைக்கு மேல் காபி குடிக்காமல் இருப்பது நல்லது. அதையும் அளவான சூட்டில் குடிப்பதே பாதுகாப்பானது.”
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்