வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala

காது வலிக்கு நாம் செய்ய வேண்டியவை, கூடாதவை....

காது வலிக்கு நாம் செய்ய வேண்டியவை, கூடாதவை....

காதினுள் உள்ள மென்மையான உறுப்புகளில் ஏதேனும் ஒன்று பழுதுபட்டால் கூட நம்மால் ஒலியுணர்வை முழுமையாகப் பெறமுடியாமல் போகிறாது. எதிர்பாராத நிலையில் காது பழுதுபடுவதால் செவிடாக நேரிடுகிறது. 
 

 


உரக்கப்பேசினால் மட்டுமே சிலருக்குக் கேட்கும். குடும்பத்தில் பிறவிச் செவிடர்கள் இருந்தால் இரத்த உறவில் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் காது கேளாமலிருக்க வாய்ப்புண்டு.
 
மூக்கின் பின் பகுதியில் இருந்து காதுக்குச் செல்லும் குழாயில் (யுஷ்டெசியன்) அடைப்பு ஏற்பட்டு நோய்த் தொற்று உண்டாவதே காதுவலிக்கக் காரணம் மேலும், 

* தொண்டையில் அழற்சி காரணமாகவும் காது வலி ஏற்படலாம். நோய்க்கிருமிகள் தாக்கத்தின் விளைவாகவும் காது வலி ஏற்படலாம். இதற்காக காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணரை அணுகி சிகிச்சைப் பெறுவது நல்லது.
 
* சுவாசிப்பதில் தவறான முறையில் மூச்சு வெளியேற்றுவதும் காது வலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். மூச்சு உறுப்புகளில் தொற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் காதுவலி ஏற்படலாம்.
 
* நீர்நிலைகளில் குதித்துக் குளிப்பதாலும், கடல் நீரில் குளிப்பதாலும் நோய்தொற்று நடுச்செவிக்குழல் மூலம் காதுக்குள் சென்று கடுமையான காது வலியை ஏற்படுத்தக்கூடும்.
 
* சளியும் மூக்கடைப்பும் அதிகமாகும் போதும் காதுவலி வரும். அதிகமாக சிரத்தை எடுத்து மூக்கு சிந்தினாலும் காதில் வலி ஏற்படும்.
 
* பற்சொத்தை, கடைவாய்ப்பல் வெளிவராதிருத்தல், நாக்கு மற்றும் வாய்ப்புண்கள், டான்சில் சதை வளர்ச்சி , கழுத்தெலும்புத் தேய்வு, புற்றுநோய் போன்ற நலிவுகள் மற்ற உறுப்புக்களைப் பாதிப்பதினால் காதில் வலி ஏற்படக்கூடும்.
 
செய்ய கூடாதவை
 
காதுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் என்கிற திரவம் சுரப்பதால் அழுக்கு தானே வெளியேறிவிடும். அதனால் காதுக்குள் குச்சி, பட்ஸ் விட்டு சுத்தம் செய்யக் கூடாது.
 
80 முதல் 85 டெசிபல் வரைதான் நம் காது சப்தத்தைத் தாங்கும். அதற்கு மேல் என்றால் சவ்வு கிழிந்துவிடும். அதனால் அதிக சப்தத்தைத் தவிர்க்கவும்.
 
காதில் இயர் போன் வைத்துக் கொண்டு, அதிக சத்தத்தில் வீடியோ கேம்ஸ், படம் பார்ப்பது செல்போன் பேசினால் காது வலிக்கு அதிக காரணமாகும்.
 
நீண்ட நேரம் செல்போன் பேசினால் காது வலிக்கும். அதனால் காது மாற்றி மாற்றிப் பேசப் பழகிக் கொள்ள வேண்டும்.
 
சைனஸ், டான்சில், தாடை எலும்பில் பிரச்னை என்றால் காது வலிக்கும். உடனே அது தொடர்பான சிகிச்சை எடுத்துக் கொண்டால் காது வலி நிற்கும்.
 
காதில் எண்ணெய் ஊற்றலாமா?
 
கூடவே கூடாது. அந்த வலி எதனால் வந்தது என்று தெரியாமல் எண்ணெய் ஊற்றுவதால் விபரீதமாகிவிடும். 
 
காது மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்னரே, எண்ணெய் ஊற்றலாமா சொட்டு மருந்து இடலாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
 
காதில் பூச்சி நுழைந்து விட்டால்
 
பூச்சி காதுக்குள் நுழைந்தால், சில சொட்டு சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விட்டால் அது பூச்சியைக் கொன்றுவிடும். எண்ணெயை காய்ச்சி ஊற்றக் கூடாது. குச்சி வைத்துக் குடைவது கூடாது. 
 
தலையைச் சாய்த்தால் பூச்சி தானே வந்துவிடும். அப்படியும் வராவிட்டால் மருத்துவர் மூலம் புனல் வைத்து நீக்கிவிடலாம்.
 
காதுவலிக்கு
 
விரல்களால் மூக்கைப் பிடித்துக் கொண்டு, வாயை மூடி, வாயில் காற்றை நிரப்புங்கள். கன்னங்கள் உப்பலாகும். 
 
அப்போது காற்றை காதுவழியாக மெதுவாக வெளியேற்றுங்கள் காது சமநிலைக்கு வந்து காதுவலி நின்றுவிடலாம். காது அடைப்பும் சரியாகிவிடும்.
 
காதுவலிதானே என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். ஏனென்றால் அது காது செவிடாக வழிவகுத்துவிடும்.