வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 ஜனவரி 2020 (09:59 IST)

கடைய சாத்திட்டு, நடைய கட்டு... வோடஃபோனின் பரிதாப நிலை

ஏற்கனவே இருக்கும் நஷ்டத்திற்கு மத்தியில் தற்போது வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 
 
சமீபத்தில், அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதன் வருவாய் பகிர்வுத் தொகையை ஜனவரி 23-க்குள் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வோடஃபோன் ஐடியா, ஏர்டெல், டாடா டெலிசர்வீஸ் ஆகிய நிறுவனங்கள் மனு தாக்கல் செய்திருந்தன.
 
இதன் மீதான தீர்ப்பு நேற்று வெளியானது. அதன்படி, வோடஃபோன் ஐடியா, ஏர்டெல், டாடா டெலிசர்வீஸ் ஆகிய நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் அரசுக்கு வரும் 23 ஆம் தேதி பகிர்வுத் தொகையை கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 
எனவே, வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ.53,039 கோடி அரசுக்கு செலுத்த வேண்டும். இதுதவிர, இந்நிறுவனத்துக்கு ரூ.1.15 லட்சம் கோடி அளவில் கடனும் உள்ளது. இது போதாதென்று வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. ஆம், பங்கு மதிப்பு 25.83 சதவீதம் அளவில் சரிந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியே போனால் விரைவில் வோடபோன் மேலும் கடனிலும், நஷ்டத்தில்லும் தத்தளிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.