வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2015 (19:17 IST)

வோக்ஸ்வேகன் கார் விற்பனைக்கு சிங்கப்பூர் தடை

வோக்ஸ்வேகன் புகை மாசுவின் அளவைக் குறைத்துக் காட்டி, மோசடியில் ஈடுபட்டதாக கூறி இந்நிறுவனத்தின் கார் விற்பனைக்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது.
 

 
உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆட்டோ மொபைல் நிறுவனமாக திகழும் வோக்ஸ்வேகன் நிறுவனம் தமது நிறுவன டீசல் கார்கள் வெளியிடும் புகை மாசுவின் அளவைக் குறைத்துக் காட்டி, மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
மேலும், வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டீசல் கார்களில் புகை மாசுவை குறைத்துக் காட்டும் வகையில் பிரத்யேக கருவி பொருத்தப்பட்டிருப்பதாக, அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு குற்றச்சாட்டியது.
 
அதைத் தொடர்ந்து, லட்சக்கணக்கான டீசல் கார்களை அந்நிறுவனம் திரும்பப் பெற்றது. வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க, ஜெர்மனி அரசு விசாரணை ஆணையத்தை அமைத்தது.
 
இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்டின் வின்டர்கார்ன், தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
 
மேலும், டீசல் கார்களில் செய்த மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரு கோடியே பத்து லட்சம் கார்களைக் கண்டறிந்து அவற்றின் எஞ்ஜின்களை மாற்றித் தருவதாக அறிவித்தது.
 
இந்நிலையில், சிங்கப்பூர் தேசிய சுற்றுச்சூழல் முகமை, வோக்ஸ்வேகனின் முறைகேட்டை காரணம் காட்டி, அதன் டீசல் கார்கள் விற்பனைக்கு தடைவிதித்துள்ளது. சிங்கப்பூரில் இத்தைகய முறைகேடான கார்கள் 650 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.