வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 22 ஜூன் 2015 (09:52 IST)

2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் அச்சிடப்பட்ட ரூ.500, 1,000 நோட்டுகளை மாற்ற இம்மாதம் 30 ஆம் தேதி கடைசி நாள்

2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் அச்சிடப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
 
2005 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா அச்சிட்டு வரும் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு தன்மை கொண்டவை. இதனால் 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட இதே மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை நாட்டின் பாதுகாப்பு கருதி இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற முடிவு செய்தது.
 
அதன்படி 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கியில் கொடுத்து அவற்றை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அல்லது தங்களுடைய வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்திக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. 
 
இதற்கான கால அவகாசம் கடந்த ஜனவரி 1 ஆம் தேதியுடன் முடிவடைவதாக, ரிசர்வ் வங்கி முன்னர் அறிவித்தது. எனினும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று இதற்கான அவகாசத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்தது.
 
அதன்படி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வருகிற 30 ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே இதற்குள் இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள பொதுமக்கள் ஒத்துழைக்கும்படி ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
 
2005 ஆம் ஆண்டுக்கு முந்தைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண்பது எளிதான ஒன்றாகும். இந்த நோட்டுகளின் பின்புறத்தின் கீழ் ரூபாய் நோட்டு அச்சடித்த ஆண்டு இடம் பெற்றிருக்காது.
 
அதே நேரம் 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் அச்சிடப்பட்ட இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தின் கீழ் பகுதியில் அச்சிட்ட ஆண்டு தெளிவாகத் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.