1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 19 அக்டோபர் 2016 (11:12 IST)

லாபம் அள்ளித்தரும் பிபிஎப் கணக்கு: ஐசிஐசிஐ போட்டியாகும் எச்டிஎஃப்சி வங்கி!!!

ஐசிஐசிஐ வங்கிக்குப் போட்டியாக இரண்டாம் மிகப் பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி இப்போது பிபிஎப் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. 

 
தனியார் வங்கிகளில் ஐசிஐசிஐ வங்கி நீண்ட காலமாகவே தங்களது வாடிக்கையாளர்களுக்கு பிபிஎப் கணக்கு சேவை அளித்து வருகிறது. இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கிக்குப் போட்டியாக எச்டிஎப்சி வங்கியும் இப்போது பிபிஎப் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. 
 
பிபிஎப் என்றால் என்ன? 
 
இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் அதிக வட்டியுடன் வரி இல்லாமல் சிறந்த லாபத்தை அளிக்கும் பொதுமக்களுக்கான சேமிப்பு திட்டம் பிபிஎப் ஆகும்.
 
பிபிஎப் கணக்கைத் திறக்க தேவையான ஆவனங்கள்:
 
அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், இரண்டு புகைப்படத்துடன் அருகில் உள்ள எச்டிஎப்சி வங்கிக் கிளையை அணுகி பிபிஎப் கணக்கை திறப்பதற்கான படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 
 
திறக்கப்பட்ட கணக்கு தனிநபர் வங்கி கணக்குடன் இணைக்கப்படும்.
 
பிபிஎப் கணக்கில் இணையதளம் மூலம் பணத்தை எப்படி முதலீடு செய்வது? 
 
பிபிஎப் கணக்கை தனிநபர் வங்கி கணக்குடன் இணைத்த பின்னர் பணத்தை நேரடியாக முதலீடு செய்யலாம். 
 
தவனை தொகையைப் பிடித்தம் செய்ய வேண்டும் என்றால் இணையதள வங்கி சேவையில் இணைக்கப்பட்ட பிபிஎப் கணக்கில் உள்நுழைந்து ஆடோ டெபிட் தெரிவைத் தேர்வு செய்ய வேண்டும் அல்லது ஈசிஎஸ் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தும் முதலீட்டைத் தொடரலாம்.
 
பிபிஎப் கணக்கு விவரங்கள்: 
 
வருடத்திற்குக் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரையிலான தவணையுடன் முதலீட்டைத் தொடரலாம். 
 
பணத்தை அதிகபட்சமாக வருடத்திற்கு 12 தவணையில் செலுத்தலாம். அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை இத்திட்டத்தில் பணத்தை சேமிக்க இயலும். 
 
இத்திட்டத்தின் கீழ் சேமிக்கும் பணத்திற்கு 8 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும். மேலும் இதன் மூலம் பெறும் லாபத்திற்குப் பிரிவு 80சி-இன் கீழ் வரி ஏதும் விதிக்கப்படாது. 
 
ஒருவேலை ஏதேனும் ஒரு வருடம் உங்களது கணக்கில் 500 ரூபாய் செலுத்தமுடியாமல் போனால் 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி வரும்.
 
கடன் வசதி:
 
கணக்கைத் துவங்கிய பிறகு மூன்றாவது நிதி ஆண்டு முதல் ஐந்தாம் நிதி ஆண்டின் இறுதி வரை கடன் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. 
 
சேமித்து வந்துள்ள பணத்தை இடையில் எடுக்க வேண்டும் என்றால் கணக்கு காலாவதியான பிறகு 5 வருடத்திற்குப் பிறகு 50 சதவீத பணத்தை எடுக்க இயலும்.
 
பிற வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் உள்ள பிபிஎப் கணக்கை எச்டிஎப்சி வங்கியிற்கு மாற்ற வேண்டுமா? 
 
தபால் அலுவலகத்தில் அல்லது பிற வங்கிகளில் வைத்துள்ள பிபிஎப் கணக்கை எச்டிஎப்சி வங்கியில் மாற்ற விரும்பினால் மாற்ற பிபிஎப் கணக்கு வைத்துள்ள வங்கியில் அல்லது தபால் அலுவலகத்தில் மாற்றச் செய்வதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கணக்கு புத்தகத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். 
 
இதனைத் தொடர்ந்து கணக்கு மூடப்பட்டு விரும்பிய எச்டிஎப்சி வங்கி கிளைக்கு விவரங்கள் அனுப்பப்படும். பின்னர் அங்கு ஆவனங்களுடன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளித்து கணக்கை மீண்டும் தொடரலாம்.