வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தே‌‌ர்த‌ல் 2014
  4. »
  5. தே‌ர்த‌ல் செ‌ய்‌திக‌ள்
Written By Webdunia
Last Modified: சனி, 22 பிப்ரவரி 2014 (18:24 IST)

தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து நிற்கும் ஆம் ஆத்மி வேட்பாளர்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து குமார் விஸ்வாஸ் போட்டியிடுகிறார்.
FILE

டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் 48 நாட்கள் பரபரப்பான ஆட்சி நடத்திய ஆம் ஆத்மி கட்சி அரசு, ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு கிடைக்காததால் பதவி விலகியது. அதன் தாக்கம் மறைவதற்குள், வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான வியூகம் வகுப்பதில் அந்த கட்சி தீவிரம் காட்டியது.

கட்சித்தலைவர் கெஜ்ரிவால் வீட்டில் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்களைக்கொண்ட முதல் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் துணைத்தலைவரும், அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்று கருதப்படுபவருமான ராகுல் காந்தியை எதிர்த்து உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், குமார் விஸ்வாஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூர் தொகுதியில், பா.ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் நிதின் கட்காரியை எதிர்த்து முன்னாள் வங்கி அதிகாரி அஞ்சலி தமானியா களம் இறங்குகிறார்

டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் மத்திய அமைச்சர் கபில்சிபலை எதிர்த்து டி.வி. செய்தியாளராக இருந்து அரசியலுக்கு வந்த அஷுதோஷ் நிறுத்தப்பட்டு இருக்கிறார். மற்றொரு மத்திய அமைச்சர்யான சல்மான் குர்ஷித்தை எதிர்த்து உ.பி.மாநிலம் பரூக்காபாத் தொகுதியில் முன்னாள் பத்திரிகையாளர் முகுல் திரிபாதி களம் இறக்கப்பட்டு இருக்கிறார். சமூக ஆர்வலர் மேதா பட்கர், வட கிழக்கு மும்பையில் தேசியவாத காங்கிரஸ் வென்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி வெற்றி பெற்ற பஞ்சாப் மாநிலம் லூதியானா தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர், வக்கீல் எச்.எஸ்.பூல்கா ஆவார். மத்திய அமைச்சர்யும், ராஷ்டிரீய லோக்தளம் கட்சித்தலைவருமான அஜீத்சிங்கை எதிர்த்து விவசாயிகள் தலைவரான சோமேந்திர டாகா, உ.பி. மாநிலம் பாக்பத் தொகுதியிலும், தெற்கு மும்பையில் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோராவை எதிர்த்து சன்யாலும், சுரேஷ் கல்மாடியின் புனே தொகுதியில் சுபாஷ் வாரேயும் போட்டியிடுகிறார்கள்.

ஆம் ஆத்மி கட்சியின் கொள்கை முடிவுகளை எடுக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள யோகேந்திர யாதவ், அரியானா மாநிலம் குர்கான் தொகுதியில் போட்டியிடுகிறார். டெல்லியில் 2 தொகுதிகளுக்கும், உ.பி.யில் 7, மராட்டியத்தில் 6 தொகுதிகளுக்கும், அரியானா, அருணாசல பிரதேசம், ஒடிசா, மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ரேபரேலி (உ.பி.) தொகுதியில், முதல் பட்டியலில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

கிரிமினல் குற்ற பின்னணி இல்லாத நேர்மையானவர்களை மட்டுமே வேட்பாளர்களாக தேர்ந்து எடுத்து வருவதாகவும், மற்ற மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான மனீஷ் சிசோடியா நிருபர்களிடம் தெரிவித்தார்.

கெஜ்ரிவால் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க ஆம் ஆத்மி கட்சி தயாராகி வருவதாகவும், தேசிய அளவிலான தேர்தல் பிரசாரத்தை வருகிற 23-ந்தேதி அரியானா மாநிலம் ரோதக்கில் (அரியானா முதலமைச்சர் புபிந்தர்சிங் ஹூடாவின் மகன் தீபிந்தர்சிங் தொகுதி) தொடங்குவது என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மார்ச் 2-ந்தேதி உ.பி.யில் பிரசார பேரணி நடைபெறுகிறது.