வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
Written By அ‌ய்யநாத‌ன்

ஹசன் அலி கான் - இந்தியாவின் வரி கொடா மன்னர்

‘ஜனநாயகத்தில் எல்லோரும் மன்னர்’ என்றெல்லாம் சொல்லி சொல்லித்தான் நம்மை வளர்த்தார்கள். அதாவது விடுதலை பெற்ற நமது பாரத திருநாட்டில் இன்று (அதாவது அன்று) ஜனநாயகம் தவழ்கிறது. எனவே, இங்கு யாரும் அடிமையும் இல்லை, யாரும் ஆண்டையுமில்லை என்றார்கள். அப்படிப்பட்ட பாரத திருநாட்டை நின் தாய் போல் நினைத்து காத்திடு பாப்பா என்று பக்தியுடன் பாடிக்காட்டி வளர்த்தார்கள்.

இந்த நாட்டை புரிந்துகொள், விடுதலை பெற இந்த நாட்டின் தலைவர்கள் செய்த தியாகங்களை படி, மகாத்மா காந்தியைப் பற்றி அறிந்துகொள், “சுதந்திரம் எனது பிறப்புரிம” என்று முழங்கினாரபால கங்காதர திலகர் - அவரை தெரிந்துகொள். வெள்ளையன் நாட்டில் சென்று படித்தாலும், அவன் அரசியலிற்கும் பண்பாட்டிற்கும், பெண்பாட்டிற்கும் அடிமையாகமல், தனது நாட்டின் அடிமைத் தளை உடைக்க, இந்தியா திரும்பி விடுதலை போராட்டத்தை எழுத்தாலும், பேச்சாலும், இரகசிய இயக்கத்தாலும் நடத்தினாரே அரவிந்த கோஷ் - அவரைத் தெரிந்துகொள். ஐசிஎஸ் தேரினாலும், பதவி வேண்டாம், சுக வாழ்க்கை வேண்டாம் என்று கூறி, அரசியலிற்கு வந்த நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பற்றி தெரிந்துகொள் என்றெல்லாம் கூறி வளர்க்கப்பட்டவர்கள்தான் இன்றைக்கு இருக்கும் பல கோடிக்கணக்கான ‘பழை’ இளைஞர்கள். அவர்கள் யாவரும் இந்த நாட்டின் நிலை பார்த்து நொந்து நூலாகிக்கொண்டிருக்கிறார்கள்.

FILE
அவர்களைப்போல் விவரமறியாமல் இன்றைய இளைஞர்களும் ஆகிவிட்டால் என்னாவது? இன்றைய இந்தியாவில் அவர்கள் யாரையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்பதை இன்று வெளிவந்த ஒரு செய்தி (வருமான வரித்துறை, பொருளாதார குற்றப்பிரிவு என்று நமது நாட்டின் அரசுத் துறை அதிகாரிகளுக்கு ரொம்ப நாளாகவே பிரபலமானவர்தான்) நம்மை உந்தித் தள்ளியது. அந்த செய்தி கூறும் மனிதர் பெயர்: ஹசன் அலி கான்.

யார் இந்த ஹசன் அலி? தொழிலதிபரா? இல்லை. விஞ்ஞானியா? இல்லை. குடியரசுத் தலைவரிடம் விருது பெரும் அளவிற்கு எதையாவது இந்த நாட்டிற்காக சாதித்தவரா? இல்லை. இன்னாள் அல்லது முன்னாள் எம்.பி.யா? இல்லை. பழைய மந்திரியா? அதுவும் இல்லை. பிறகு இவர் யார்? நீரா ராடியா போன்று இந்த தேசத்தின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு பெரு நிறுவனங்களுக்கு அதிகார புரோக்கராக செயல்ப்பட்டவரா? அதுவும் இல்லை. பிறகு யார்தான் இவர்?

இந்த நாட்டின் மிகப் பெரிய மனிதர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் அரும்பாடுபட்டு சம்பாதித்து, வரி கட்டாமல் பதுக்கி வைத்த கருப்புப் பணத்தை, ‘பல்வேறு வழி’களில் உழைத்து பல இலக்கங்களில் சுட்டு குவித்தவர்கள், எப்படி சம்பாத்தித்தோம் என்பது தெரிந்தால் சிக்கல் என்ற நிலையில் உள்ளவர்கள் என்றுள்ள பல்லாயிரக்கணக்கானோருக்கு பணக் கடவுள் இவர்!

இங்கே, இந்த பாரத திருநாட்டில் கொள்ளை அடித்த பணத்தை சுவிஸ் வங்கிகளின் இரகசிய கணக்குகளுக்கு மாற்றி, அந்த கருப்புப் பணத்தை பூதம்போல் நின்று பாதுகாக்க பலருக்கும் உதவி புரிந்தவர். பல ஆண்டுகளாக இவர் இந்த நாட்டில் இருந்து பல்வேறு ‘ரூபங்களில்’ அயல் நாட்டிற்கு பணமாற்றம் (ஹவாலா) செய்து - அதில் ஒரு விகிதத்தை மட்டுமே கமிஷன் பெற்றுக்கொண்டு - சுவிஸ் வங்கிகளில் இரகசிய கணக்கையும் துவக்க உதவியவர். பணத்தை காப்பாற்றித் தருபவர் பணக் கடவுள் தானே? அவர்தான் ஹசன் அலி கான்.

புனே நகரில் ஒரு குதிரைப் பண்ணை வைத்துக்கொண்டு எளிமையாக வாழ்ந்துவரும் இந்தத் ‘தெய்வம’, சுவிஸ் வங்கியின் பல்வேறு (நபர்களின்) கணக்குகளில் கொண்டு சென்று குவித்த பணம் 8 பில்லியன் டாலர்கள்! ஆங்கில கணக்குப்படி ஒரு பில்லியன் என்றால் இந்திய கணக்கில் நூறு கோடி. ஒரு டாலருக்கு ரூ.45 என்று வைத்துக்கொ்ள்ளுங்கள். இவர் நாடு கடத்திய பணம் இந்திய ரூபாயில் 4,500 கோடி!

இவ்வளவு பணம் கடத்தி சுவிஸ் வங்கிக் கணக்கில் போட்ட இந்த மகான் அதற்காக பெற்ற கமிஷன் வருவாய் தொடர்பாக வருமான வரி எதுவும் செலுத்தவில்லை. செலுத்தவில்லை என்றால் எப்படி? வருமான வரி விவரமே தாக்கல் செய்யவில்லை!

இவரைப் பற்றி அறிந்ததும் வருமான வரித்துறையும், சட்ட அமலாக்கப் பிரிவும் (Enforcement Directorate), சுவிஸ் அரசிற்கு கடிதம் எழுதின. “இவர் இந்தியாவில் இருந்து எவ்வளவு பணத்தை அங்கு கொண்டு வந்த சேர்த்தார் என்ற விவரங்களைத் தாருங்கள், இவர் இந்தியாவில் வருமான வரி செலுத்தவில்லை, அதற்கான விவரம் கூட தாக்கல் செய்யவில்லை. அது எங்கள் நாட்டு சட்டப்படி குற்றம்” என்று கூறி, விவரம் கேட்டன.

வந்தது பதில். “வருமான விவரம் தாக்கல் செய்யாமை உங்கள் நாட்டில் குற்றமாக இருக்கலாம், எங்கள் நாட்டில் (சுவிட்சர்லாந்தில்) குற்றமில்லை. எனவே அந்நாரை பற்றிய விவரம் எதுவும் தர முடியாது” என்று அந்த ஜனநாயக நாடு பதில் போட்டுவிட்டது.

2007ஆம் ஆண்டு வருமான வரித்துறையும், அமுலாக்க பிரிவும் ஹசன் அலி கான் வீட்டில் சோதனை நடத்தியபோது சிக்கிய ஆவணங்களையும் அந்தக் கடிதத்தோடு சுவிஸ் அரசிற்கு அனுப்பி வைத்தார்கள். அதனை போலியாக உருவாக்கப்பட்ட ஆவணங்கள் (Forged documents) என்று சுவிஸ் அரசு கூறி நிராகரித்துவிட்டதாம். என்னே பரிதாபம் இந்திய நாட்டிற்கு! அதற்கு மேல் வருமான வரித்துறையும், அமுலாக்க பிரிவும் மேற்கொண்டு எதுவும் செய்யாமல் ‘அட போடா’ என்று விட்டுவிட்டார்கள்.

இவர் நாடு கடத்திய பணத்திற்கு வருமான வரி மட்டும் எவ்வளவு செலுத்தியிருக்க வேண்டும் தெரியுமா? கபாலி கான் ரேஞ்சுக்கு கதை விடலையப்பா, மத்திய அரசு பிரபல ராஜ்சபாவில் சொன்னது: ரூ.50,000 கோடி. வட்டியோடு, தாமத அபராதம் ஆகியவற்றையெல்லாம் சேர்த்தால் ரூ.70,000 கோடி!

ஹசன் அலி கான் புனேயில் ஜாலியாக குதிரை பண்ணை நடத்திக் கொண்டு இருக்கிறார். இதிலிருந்து இந்திய நாட்டு இளைஞர்கள் கற்ற வேண்டிய பாடம் என்ன? இந்த நாட்டின் சட்ட, அரசியல் விவகாரங்களில் உள்ள ‘நெளிவு, சுளிவு’ ஆகியவற்றை கற்றால் நீங்களும் - ஹசன் அலி கான் போல - ‘இந்நாட்டு (வரி கட்டாத) மன்னரே’.